நீதி அமைச்சின் சேவை கேள்விக்குறி!



வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கும் பொலிஸாருக்கிடையே முறுகல் நிலை தோன்றியுள்ளது. 

நீதி அமைச்சின் நடமாடும் சேவை நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலகத்திற்கு செல்ல முற்பட்டவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்

நீதி அமைச்சின் நடமாடும் சேவை வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுவரும் நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மாவட்ட செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் பின்னர் மாவட்ட செயலகத்தற்குள் செல்ல முற்பட்டபோது பொலிஸார் மறித்தனர்.

இதன் காரணமாக பல மணி நேரமாக பொலிஸாருடன் மல்லுக்கட்டிய காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தம்மை உள்ளே செல்ல விடுமாறு கோரினர்.

இந் நிலையில் 11 மணியளவில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுடம் சென்று தற்போது குறித்த அலுவலகத்திற்கு அதிகாரிகள் வரவில்லை எனவும் சமாதான நீதிவான்களே வந்துள்ளனர். அதிகாரிகள் வந்ததும் உங்களை செல்ல அனுமதிக்கின்றோம் என தெரிவித்தனர்.

இதன்போது 9 மணியில் இருந்து 4 மணிவரையில் நடமாடும் சேவை இடம்பெறும் என தெரிவித்திருந்தனர். அவ்வாறெனில் 11 மணிவரையில் அதிகாரிகள் வரவில்லையாயின் அந்த அலுவலகம் எதற்கு என கேள்வி எழுப்பினர்.

எமக்கு பணமோ சான்றுதழோ தேவையில்லை. எமது கருத்தை அந்த அலுவலகத்தில் கூறிவிட்டு வருகின்றோம் என தெரிவித்தனர்.

இந்நிலையில் அவர்கள் எவருமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படாததுடன் பலாத்காரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே அவர்களது போராட்ட களத்தில் எந்தவொரு தமிழ் அரசியல் தலைவர்களும் எட்டிப்பார்த்திருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.


No comments