மணிக்கு ஆபத்தில்லையாம்!



யாழ்.  மாநகர சபை உறுப்பினர்களால், வரவு - செலவுத் திட்டம்  ஏகமனதாக அங்கிகரிக்கப்படும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக, யாழ். மாநகரசபை மேயர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். - நாயன்மார்கட்டு குளப்புனரமைப்பு பணிகளை இன்றைய தினம் (09) ஆரம்பித்து வைத்தார் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், வரவு - செலவுத்திட்ட தயாரிப்பின் போது, அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி, அவர்களுடைய கோரிக்கைகளையும் உள்ளடக்கியே தயாரித்து இருப்பதாகத் தெரிவித்தார்.

ஆகவே, அவர்களுடைய கோரிக்கைகளை உள்ளடக்கிய வரவு - செலவுத் திட்டத்தை அவர்களே தோற்கடிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை எனவும், அவர் கூறினார்.

"யாழ். மாநகர சபையில் அங்கம் வகிக்கின்ற அனைத்துக் கட்சிகளின் தலைமைகளிடமும், மாநகர சபையில் முன்வைக்கப்படுகின்ற வரவு செலவு திட்டத்தை ஆதரிக்க வேண்டும் என நான் பகிரங்கமாகவும் அன்பாகவும்  கோரிக்கையை விடுக்கின்றேன்.

"எனவே, மாநகர சபை வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் முகமாக கட்சித் தலைவர்கள் செயற்படமாட்டார்கள் என நான் நினைக்கின்றேன்" என்றார்

No comments