சிறுவர் ஊசி பயமில்லை:மருத்துவர் அருள்மொழி!



சிறுவர்கள் தமக்கு வழங்கப்படும் பைசர்(Pfizer)தடுப்பூசியை எவ்வித அச்சமுமின்றி வைத்திய ஆலோசனையின் கீழ் பெற்றுக் கொள்ள முடியும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை குழந்தை சிறப்பு வைத்திய நிபுணர் கே.அருள்மொழி  தெரிவித்தார்.


சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில்   அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 12 தொடக்கம் 19 வயது வரையானவர்களில் நாள்பட்ட நோய்கள் உடையோர் மற்றும் விசேட தேவையுடையோருக்கு முதற்கட்டமாக வெள்ளிக்கிழமை தொடக்கம் கொழும்பில் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடானது கொழும்பு, குருநாகல், அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதுடன் அதனை தொடர்ந்து ஏனைய மாவட்டங்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தடுப்பூசியின் அடுத்த கட்டமாக 12 தொடக்கம் 19 வயதினருக்கு வழங்கப்படுவதுடன் மூன்றாம் கட்டமாக 12 தொடக்கம் 15 வயது உடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளது.


இலங்கையில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை ஆனது உலகளாவிய ரீதியில் பின்பற்றப்படுகின்ற வைத்திய ஆலோசனைகள் நெறிப்படுத்தல்களைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


யாழ்ப்பாணத்திற்கும் விரைவில் பைசர் தடுப்பூசி பொற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை சுகாதாரத் தரப்பினர் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். ஆகவே பெற்றோர்கள் சிறுவர்களுக்குத் தடுப்பூசிகளை பெறும்போது குழந்தை வைத்திய நிபுணர்கள் அல்லது பொது வைத்திய நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று உரிய காலத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள வேண்டும். என அவர் மேலும் தெரிவித்தார்.


No comments