கொரோனாவுக்கு கோயில்!

 


கொரோனா எனும் கொடிய வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது.

இந்நிலையில் கோவையில் காமாட்சிபுரி ஆதீனம் சார்பில் ‘கொரோனா தேவி' சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

கொரோனாவுக்கு சிலை வைத்து வழிபாடு நடத்தியது சமூக வலைத்தளங்களிலும் வைரலானது. 

இந்தநிலையில், தேனி அருகே அம்மச்சியாபுரம் கிராமத்தில் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ராஜரத்தினம் என்பவர் தனக்கு சொந்தமான இடத்தில் கொரோனாவுக்கு கோவில் கட்டும் பணியை தொடங்கி உள்ளார். 

அம்மச்சியாபுரத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையோரம் உள்ள விவசாய நிலத்தில் கொரோனா கோவில் என்ற அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டு உள்ளது. கம்புகள் நடப்பட்டு, அதில் வேப்பிலை கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜரத்தினத்திடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-நான் மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளேன். தற்போது விவசாயம் செய்து வருகிறேன். கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துள்ளது. 

கண்ணுக்கு தெரியாத அந்த வைரஸ் உலகில் பல தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கொரோனாவுக்கு ஒரு சக்தி இருப்பதாக உணர்கிறேன்.


முந்தைய காலத்தில் அம்மை நோய் தாக்கம் அதிக அளவில் இருந்தபோது, அது வழிபாடாக மாறியது. இதேபோல் தான் கொரோனாவையும் பார்க்கிறேன். அதனால் கோவில் கட்ட முடிவு செய்தேன். விரைவில் மேடை வடிவில் கோவில் கட்ட உள்ளேன். பூஜை, வழிபாடு எல்லாம் கிடையாது. இந்த வழியாக கடந்து செல்பவர்கள் கொரோனா கோவிலை பார்த்து கும்பிட்டு செல்லட்டும். அதன் மூலம் அவர்கள் பாதுகாப்பான சூழலில் வாழட்டும் என்பதற்காக இதை கட்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.



No comments