மணி விவகாரம்:உயர்நீதிமன்றிற்கு செல்கிறது முன்னணி !


யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் மயூரன் இருவரையும் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடைக் கட்டளையை ஆட்சேபனைக்கு உள்படுத்தி உயர் நீதிமன்றில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் முதலாவது மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்களை யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றில் தாக்கல் செய்தது. அவை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கட்சியின் இறுதி சந்தர்ப்பமாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளன.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் யாழ்ப்பாணம் மாநகர சபைக்குத் தேர்ந்து அனுப்பப்பட்ட வி.மணிவண்ணன், உள்ளிட்ட உறுப்பினர்கள் தமது பங்காளிக் கட்சியான தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்டதால் மாநகர சபை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குமாறு அந்தக் கட்சி, யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கேட்டுக்கொண்டது.

அதனடிப்படையில் வி.மணிவண்ணனின், மயூரன் உள்ளிட்டவர்கள் யாழ்ப்பாணம் மாநகர சபை உறுப்பினர் பதவி வறிதாகியதாக யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகரால் அவருக்கு அறிவிக்கப்பட்டது.

தனது உறுப்புரிமை நீக்கத்தை சவாலுக்குட்படுத்தி யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் சட்டத்தரணி வி.மணிவண்ணன், சிறப்பு மனுவை தானே தாக்கல் செய்தார். ஏனைய சக உறுப்பினர்களுக்கும் அவர் தனித்தனியே மனுக்களைத் தாக்கல் செய்தார்.

மனுக்களின் பிரதிவாதிகளாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தலைவர் ஆனந்தராசா, பொதுச் செயலாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ்ப்பாணம் தெரிவத்தாட்சி அலுவலகர் உள்ளிட்ட நான்கு தரப்பினரை மனுதாரர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

தனது பதவி நீக்கத்தை சட்ட வலுவற்றதாக உத்தரவிடுமாறு கோரிய மனுதாரர், அதன் மீதான விசாரணை நிறைவடைந்து இறுதிக் கட்டளை வரும் வரை இடைக்காலத் தடைக் கட்டளையை வழங்குமாறும் கோரியிருந்தார்.

அதனை ஏற்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் ஆரம்பத்தில் கட்டாணை வழங்கி பிரதிவாதிகளின் ஆட்சேபனை விண்ணப்பத்தின் பின்னர் இடைக்காலக் கட்டளையை வழங்கியது.

மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்காலக் கட்டளையை ஆட்சேபித்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றில் மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த விண்ணப்பங்கள் மேல் நீதிமன்ற நீதிபதிகள் பாலேந்திரன் சசி மகேந்திரன், தாவூத் லெப்பை அப்துல் மனாப் ஆகியோர் அடங்கிய யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற அமர்வின் முன் விவாதங்கள் இடம்பெற்றன.

அமர்வு கடந்த மார்ச் 31ஆம் திகதி அதன் கட்டளையை வழங்கியது.

சட்டத்தரணி வி. மணிவண்ணன், மயூரன் ஆகியோரை யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் தீர்மானத்துக்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடைக் கட்டளையை உறுதி செய்தது.

அத்துடன் அதனை எதிர்த்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்களை யாழ்ப்பாணம் குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையிலேயே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தமது சட்டத்தரணி ஊடாக உயர் நீதிமன்றில் மேன்முறையீட்டு அனுமதி விண்ணப்பங்களை தாக்கல் செய்துள்ளன.


அதனடிப்படையில் உயர் நீதிமன்றினால்  எதிர்மனுதாரர்களான சட்டத்தரணி வி.மணிவண்ணன், மயூரன் ஆகியோருக்கு அறிவித்தலை அனுப்பிவைத்துள்ளது.

No comments