லண்டனில் அனைவரு கவனத்தையும் ஈர்த்த மிதக்கும் நீச்சல் குளம்!

லண்டனில் இப்போது கோடைகாலம் என்பதால், மக்கள் நீச்சல் குளத்தில் அதிக நேரம் செலவிடுகின்றனர். பல்வேறு குடியிருப்புகளில் நீச்சல் குளங்கள் 

அமைக்கப்பட்டிருக்கின்றன. அதில் மக்கள் உற்சாகமாக நீந்தி கோடை வெப்பத்தை தணிக்கின்றனர். அவ்வகையில் தென்மேற்கு லண்டனில் உள்ள குடியிருப்பில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் நீச்சல் குளம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இரண்டு வானளாவிய கட்டிடங்களின் மேல்தளங்களை இணைத்து அமைக்கப்பட்டுள்ள அந்த நீச்சல் குளம், 25 மீட்டர் நீளம் கொண்டது. இந்த நீச்சல் குளமானது, மிகவும் வலுவான கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் சுமார் 375 டன் தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. வெளியில் இருந்து பார்த்தால், நீச்சல் குளத்தில் இறங்கி நீந்துவது நன்றாக தெரியும். நீந்திக்கொண்டே லண்டன் அழகை கண்டுகளிக்கலாம்.

அந்தரத்தில் தொங்குவது போன்று இருப்பதாலும், உள்ளே இருந்து பார்த்தால் தரைப்பகுதி தெளிவாக தெரிவதாலும், இதில் இறங்கி நீந்துவதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும். ஒரு சிலர் மட்டும் தைரியமாக இறங்கி நீந்துவதை காண முடிகிறது. 

நீச்சல் குளத்தில் சிலர் நீந்துவதை ட்ரோன் மூலம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இது வானளாவிய நீச்சல் குளம் என்றும், இதுவே உலகின் முதல் மிதக்கும் நீச்சல் குளம் என்றும் அழைக்கின்றனர்.



No comments