குடுமிப்பிடி உச்சத்தில்:அவசரத்தில் மகிந்த!





பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளுடனான முரண்பாடு உச்சமடைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ஷ, அவசர சந்திப்பொன்றை இன்று (19) நடத்த விருக்கின்றார். அதற்கான அழைப்புகள், சகல கட்சிகளின் தலைவர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வருடப் பிறப்புக்குப் பின்னரான முதலாவது சந்திப்பாக இச்சந்திப்பு இருந்தாலும், பங்காளி கட்சிகளின் தலைவர்களை தனியாகவும், பங்காளி கட்சிகளின் உறுப்பினர்களை தனியாகவுமே பிரதமர் சந்திக்கவுள்ளாரென தகவல்கள் தெரிவிக்கின்றன.


இவ்விரு சந்திப்புகளும் இன்று (19) காலையும் மாலையும் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளன.  


அரசாங்கத்தின் பங்காளி கட்சிகள், மேதின கூட்டங்களை தனித்தனியாக நடத்தவிருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன. இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேனவுடன், 11 கட்சிகளின் தலைவர்கள் அண்மையில் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இதேவேளை, மாகாண சபைத் தேர்தல் முறைமையில் இரண்டு விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாது, தேர்தலை நடத்தினால், அதற்கும் கடுமையான எதிர்ப்பை தாங்கள் தெரிவிப்போமென ஆளும் கட்சியை சேர்ந்த சில கட்சிகள் பகிரங்கமாகவே அறிவித்திருந்தன.


அதுமட்டுமன்றி, துறைமுக நகர் விவகாரம் தொடர்பில் அரசாங்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகள் கடுமையாக முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் முக்கியமான இரண்டு சந்திப்புகள் இன்றையதினம் இடம்பெறவிருக்கின்றன.


No comments