யாழ்.பல்கலையில் அமைக்கப்பட்டது எந்த வகை தூபி?

நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்டு திறக்கப்படவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபி நினைவுத்தூபியா அல்லது சமாதான தூபியாவென்பதில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

யாழ்.பல்கலைக்கழக ஊழியர் ஒருவரால் பகிரப்பட்டுள்ள புகைப்படப்பிரகாரம் முன்னைய தூபியில் காணப்பட்ட அபயம் கோரும் கைகள் இல்லாமல் மக்களை கொன்றழித்த எறிகணைகள் உள்ளிட்ட நினைவூட்டல்கள் ஏதுமின்றி  சிவனேயென கடமைக்கு அமைக்கப்பட்ட தூபியே அமைக்கப்படுகின்றது.

புதைக்கப்பட்ட உடலங்களது எஞ்சிய கைகள் சிலது காணப்படுவதாகவே தூபி அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.


எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது. 

அதனை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது.


இந்நிலையில் அதன் கட்டுமான பணிகள் நிறைவிற்கு வந்துள்ள நிலையில் , நாளைய தினம் (23) அதனை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.




No comments