1400 நாளை எட்டியது காணாமல் போனவர்களின் உறவினர்கள் போராட்டம்


அரசியல் கைதிகள் விடுவிக்கப்படப்போவதாக அறிகிறோம் என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

கடந்த 1400 நாட்களாக  வவுனியாவில் சுழற்சிமுறை உணவுதவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுவரும் குறித்த உறவுகள் இன்றையதினம் அடையாள கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவிருந்தனர். அதற்கு வவுனியா நீதிமன்றம் தடைவிதித்திருந்தது. 

இந்நிலையில் இன்றையதினம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,

இன்றுடன் தாய்மாரின்  போராட்டம் 1400 நாட்களை எட்டுகிறது. எங்கள் ஜனநாயக போராட்டத்துக்கு உலகத்தின் பார்வை உள்ளது.

இந்த நாளில், நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவியை தொடர்ந்து நாடுகிறோம் . காணாமல் ஆக்கப்பட்ட நமது தமிழர் பிரச்சினை, தமிழ் இனத்தின்  வாழ்வுரிமைக்கான பிரச்சினை. இதனை தீர்க்க இந்த 3 நாடுகள் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும்.

வலுவான நாடுகள்  நமது பிரச்சினையான - இனப்படுகொலையை நிறுத்துவது அவசியம். இல்லையெனில் இலங்கையில் நடந்தது எனைய நாடுகளிலும் பின்பற்றுவதை அது ஊக்குவிக்கும்.

ஆகஸ்ட் 2020 தேர்தலுக்கு பின்னர், பல்வேறு தமிழ் கட்சிகளுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் அவர்கள் இன்னும் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர். அவர்களால் முன்மொழியப்பட்ட தங்கள் சொந்தக் கொள்கையை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்தால் , தமிழர்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை கண்டுபிடிக்க நிர்பந்திக்கப்படுவார்கள். 

இதேவேளை அரசியல் கைதிகள் விடுவிக்கப்படப்போகிறார்கள் என்ற செய்தியே எமக்கு கிடைத்திருக்கிறது. அதுபோல எமது போராட்டத்தில் ஈடுபடும் சில தாய்மார்களின் பிள்ளைகளும் விடுவிக்கப்படவுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல் வாதிகளின் நடவடிக்கைகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடரும் உள்ளமையால் தெற்கில் அந்த விடயம் சலசலப்பை ஏற்ப்படுத்தாத வகையில் மெதுவாக அவர்களது விடுதலை அமையும் என அறிகிறோம்.

No comments