ஜெனீவா தீர்மானம்! பரிந்துரைகள் வலுவானதுதாம்! சம்பந்தன்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்படும் தீர்மானமானது, பொறுப்புக்கூறலைச் செய்ய வேண்டிய இலங்கை அரசாங்கத்தினை கட்டுப்படுத்தும் வகையிலும், நடைமுறைச் சாத்தியமான முறையிலுமே, சர்வதேசத்தின் வகிபாகம் தொடர்வதாகவுமே எமது பரிந்துரைகள் அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 30.1 தீர்மானத்திலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியேறுவதாக அறிவித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட தரப்பின் பிரதிநிதிகளின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அடுத்த மார்ச் மாதம் இடம்பெறவுள்ள 46ஆவது கூட்டத்தொடரில் இலங்கை அரசாங்கத்தினை பொறுப்புக்கூறிலிருந்து விலகாதிருப்பதற்காக எவ்விதமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது என்பது தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையில் நடைபெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை, மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலைச் செய்யவைப்பதற்கான கருமத்திற்காக நானும், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அமெரிக்காவுக்கு முதன் முதலில் சென்றிருந்தோம். 

அங்கு இரண்டு நாட்கள் தங்கியிருந்து அமெரிக்க இராஜாங்கச் செயலாளர், திணைக்களத்தின் உயர்மட்ட அதிகாரிகள் உள்ளிட்டவர்களை சந்தித்து நிலைகைளை எடுத்துக் கூறியிருந்தோம். பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தோம். 

இந்தப் பின்னணியில் தான் 2012ஆம் ஆண்டு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகள் இலங்கைக்கு வருகை தந்து நிலைமைகளை ஆராந்து சென்று இலங்கை அராங்கம் பொறுப்புக்கூறலைச் செய்யும் வகையிலான தீர்மானத்தினை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றினார்கள். 

ஆகவே பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற விடயத்தில் நாங்களே முதன்முதலாக உரிய கருமங்களை முன்னெடுத்திருந்தோம். அதன் மூலமே இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் சர்வதேச கவனத்திற்கு உட்பட்டது. 

அன்றிலிருந்து இற்றைவரையில் இலங்கை அரசாங்கம் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்திவந்தாலும் அதன் பொறுப்புக்கூறலை மேற்கொள்ள வேண்டிய விடயம் தொடர்ச்சியாக நீடித்தே வந்திருந்தது. இந்நிலையில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கமே இணை அனுசரணை வழங்கியது. அதுமட்டுமன்றி வாக்குறுதிகளை வழங்கியது. 

அதன் பிரகாரம் நிறைவேற்றப்பட்ட 30.1 தீர்மானத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை முழுமையாகச் செய்யாது விட்டாலும் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தன. ஆனால் அவர்களால் பரிந்துரைகளை முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாது போனமை துரதிஷ்டவசமாகும்.

அந்த அரசாங்கத்திற்கு பரிந்துரைகளை நிறைவேற்றுவதற்காவும் தீர்மானம் ஐ.நா.அரங்கிலிருந்து நீங்கிவிடாமலிருப்பதற்காகவும் இரண்டு தடவைகள் தலா இரண்டு ஆண்டுகள் சந்தர்ப்பத்தினை வழங்கியிருந்தோம். தற்போது இரண்டாவது சந்தர்ப்பம் எதிர்வரும் மார்ச் மாதம் நிறைவுக்கு வருகின்றது. 

இந்நிலையில் நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் தொடர்ந்தும் இருக்கும் வகையிலும், அதேநேரம், இலங்கை அரசாங்கத்தினை கட்டுப்படுத்தும் வகையிலும் வலுவான காரணங்களை குறிப்பிட்டு பரிந்துரைகளை செய்யவுள்ளோம். அவ்விடயம் சம்பந்தமாக பலவிடயங்களை நாம் முன்னெடுத்து வந்துகொண்டிருக்கின்றோம். அவை அனைத்தையும் பட்டியலிட்டுக் கூற வேண்டியதில்லை. 

ஜெனிவா தொடர்பில் தற்போதைய அரசாங்கத்தின் அணுகுமுறை மாறுபட்டதாக உள்ளது. அரசாங்கம் கூறுவதன் பிரகாரம் ஜெனிவா தீர்மானத்திலிருந்து வெளியேற முடியாது. அவ்வாறு வெளியேறுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதும் இல்லை. 

ஜெனிவா விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புக்களுடனும் நாம் தொடர்ச்சியான பேச்சுக்களை நடத்திவருவதோடு முன்னெடுக்கப்பட வேண்டிய கருமங்கள் தொடர்பிலும் ஆழ்ந்த கரிசனையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம். இதில் யாரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. 

மேலும் புலம்பெயர்ந்த தேசங்களில் உள்ள பல அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக அந்தந்த நாடுகளில் பணியாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் இங்குள்ள தமிழ் பிரதிநிதிகள் அனைவரையும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

இதுவிடயம் சம்பந்தமாக தமது நிலைப்பாடுகளை மையப்படுத்திய எழுத்து மூலமான ஆவணங்களையும் அனுப்பி வைத்துள்ளார்கள். அந்த ஆவணங்கள் மற்றும் அவர்களுடனான ஊடாட்டங்களை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கையாண்டு வருகின்றார். 

இந்நிலையிலேயே அவர் தனக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணமொன்றை ஏனையவர்களுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். அவர் ஏனையவர்களையும் ஒருங்கிணைத்து ஜெனிவா கருமங்களை முன்னெடுக்கலாம் எண்ண எண்ணப்பாட்டில் அனுப்பினாரோ தெரியவில்லை. அவ்விதமாக அவர் முயன்றது தவறென்றும் கூறுவதற்கு இல்லை. அவர் அனுப்பி ஆவணம் தொடர்பில் ஏனையவர்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கின்றார்கள்.

ஏவ்வாறாயினும், நாம் ஜெனிவா தீர்மானம் நடைமுறைச்சாத்தியமான வகையிலும், வலுவானதாகவும் அமையவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம். அதற்குரியவாறான பரிந்துரைகளை செய்வோம். பலதரப்பட்ட தளங்களில் கருமங்களை முன்னெடுப்போம். சாத்தியமாகின்ற பட்சத்தில் ஏனைய தரப்புக்களையும் ஒருங்கிணைத்து எமது மக்களுக்கான நீதியைப் பெறும் பயணத்தினை தொடரவுள்ளோம் என்றார். 

No comments