கொரோனா :மனோ அமைதிக்கு பிரார்த்தனை?



உலகம் முழுவதிலும் நோயால் பாதிக்கப்பட்டோர் மன அமைதி பெறவும்  இறந்தவர்கள் நித்திய அமைதியைப் பெறுவதற்கும் பிரார்த்திக்குமாறு யாழ்.ஆயர் அழைப்புவிடுத்துள்ளார்.

அவர் விடுத்துள்ள நத்தார் செய்தியில் கொறேனா தொற்று முடிந்துவிடவில்லை. எமது பகுதிகளில் இப்போதுதான் அதிகரிக்கிறது. எனவே மிகுந்த கவனத்துடன் செயற்படுங்;கள். 

2020ஆம் ஆண்டு கிறிஸ்து பிறப்பு விழாவை இன மத நிற மொழி வேறுபாடின்றி உலகம் முழுவதிலும் கொண்டாடப்படும் வேளை உலக மக்கள் அனைவரும் கொறோணா தொற்று நோய் பற்றிய பயத்திலும் பதட்டத்திலும் நோய் காரணமாக  ஏற்படும் தாக்கங்களுக்கும் உள்ளாகி உள்ளனர். முதலில் பாலக இயேசுவின் அன்பும் அருளும்  ஆசீரும் இவ்விழாவை கொண்டாடும் அனைவரோடும் என்றும் இருப்பதாக என இறை ஆசீர் மிக்க வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

எந்தக் கொள்ளை நோயாலும் கிறிஸ்து பிறப்பின் ஒளியையும் மகிழ்வையும் நம்பிக்கையையும் குறைத்துவிட முடியாது. இந்த கொள்ளைநோய் காரணமாக பல்வேறு துன்பங்களை அனுபவித்துவரும் வேளையிலும்; வீடுகளில் அமைக்கும் கிறிஸ்மஸ் மரங்களும் குடிலும் கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற நம்பிக்கையின் அடையாளங்களாக அமையட்டும். இந்த அடையாளங்களின் வெளி அர்த்தத்தையும் தாண்டிச்சென்று அவற்றின்; வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இறை அன்பை மகிழ்வையும் முழுவதுமாக புரிந்து கொண்டு இயன்றவரை பகிர்ந்து கொள்ளுங்கள்.

கிறிஸ்து பிறப்பின் விழா என்றும் எந்த நிலையிலும் ஒரு மகிழ்வின் விழா. நம்பிக்கையின் விழா. இந்த விழாவை இவ்வாண்டு கொறோணா சுகாதார விதிமுறைகளையும் சமூக இடைவெளியையும் பேணி குடும்ப வட்டத்தில் அமைதியாகக் கொண்டாடுங்கள்.

பாலக இயேசுவின் பிறப்பு உலக மக்கள் அனைவரையும் கொறோணா தொற்றில் இருந்து பாதுகாத்து இந்த தொற்று நோய் உலகில் இருந்து முற்றாக அகல வேண்டுமென பிராத்தியுங்கள். செபத்தால் மட்டுமே இந்த தொற்றுநோயை நீக்க முடியும் என நம்பி மத பேதமின்றி இறைவேண்டுதல் செய்யுங்கள்.

தொற்றுநோய் மழைவெள்ளம் போன்ற இக்கட்டான வேளையில் உங்களால் இயன்ற வரை இயலாமையிலும் தேவையிலும் இருப்போருக்கு அன்புக்கரம் நீட்டுங்கள்.

இவ்வாண்டு ஈஸ்ரர் ஞாயிறு தின தாக்குதல்களால் இலங்கையிலும் கொறோணா தொற்றால் உலகம் முழுவதிலும் பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. புதிய ஆண்டு இறை  அன்பும் அருளும்  ஆசீரும் நிறைந்த ஆண்டாக இறையாசீர் வேண்டுகிறோம் என மேதகு கலாநிதி யஸ்ரீன் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

 


No comments