பிள்ளையானின் வழக்கு 10 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு


முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் மீதான வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன், மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கலந்துகொள்வதற்கு சிறைச்சாலை ஆணையாளரின் அனுமதியை கோருமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது

இன்றைய தினம் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கலந்துகொள்வதற்கான அனுமதி கோரிய மனுவும் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நீதிமன்றில் சட்டத்தரணிகள் ஆஜராகாத நிலையில் இன்றைய தினம் அபிவிருத்திக் குழுவில் கலந்துகொள்வது தொடர்பான கட்டளை மட்டும் விடுக்கப்பட்டது.

இதேபோன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரகாந்தன் மீதான வழக்கு விசாரணையும் இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (02) நீதிமன்றத்திற்கு சந்திகாந்தன் உட்பட ஆறு பேரும் அழைத்துவரப்பட்டனர். மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சட்டத்தரணிகள் வராத காரணத்தினால் வழக்கு எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அத்துடன் மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கலந்து கொள்வது தொடர்பான விடயம் சிறைச்சாலை ஆணையாளருடன் தொடர்பு பட்டது எனவும் அவரிடம் இது தொடர்பான கோரிக்கையினை முன்வைக்குமாறும் அங்கு அனுமதி மறுக்கப்படும் பட்சத்திலேயே நீதிமன்றத்தினை நாடமுடியும் எனவும் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் தனது கட்டளையில் தெரிவித்துள்ளார்.

No comments