சுமா-வீரசேகர கடும் மோதலாம்?


இன்று பாராளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான சரத் வீரசேகரவிற்கும், எம். ஏ. சுமந்திரனுக்குமிடையில் பலத்த விவாதம் ஏற்பட்டது.

விடுதலைப் புலிகளின் உறுப்பினரான பண்டிதருக்கு எவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நினைவஞ்சலி செலுத்த முடியும் என வீரசேகர சபையில் கேள்வி எழுப்பினார்.

பதிலளித்த சுமந்திரன்: "அமைச்சருக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு இல்லை. ஆனால் என் பெயர் பொது வெளியில் குறிப்பிடப்பட்டதால் என் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

சில நாட்களுக்கு முன்னர் நான் வயதான அம்மாவான சின்னத்துரை மகேஸ்வரி என்பருக்காக யாழ் மேல் நீதிமன்றில் நான் ஆஜரானேன். அவரது மகன் 1985 இல் பண்டிதர் என அழைக்கப்படும் அவரது மகனை வருடா வருடம் நவம்பர் மாதத்தில் நினைவு கூர்வது வழக்கம். தனது நினைவு கூரல் உரிமையைப் பாதுகாக்கவென அவர் அந்த வழக்கைப் பதிவு செய்திருந்தார்.

(வீரசேகர இடைமறிக்க) ஆம் அவர் விடுதலைப் புலிகள் தலைவர் தான். ஆனால் பண்டிதர் அந்த அம்மாவினது புதல்வன் கூட. அத்துனை தாய்மாருக்கும் தம் பிள்ளைகளை நினைவேந்தும் உரிமை இருக்கிறது.

அமைச்சர் ஒரு போதும் ஜே.வி.பி-யின் தலைவர் ரோகன விஜயவீரவை ஜே.வி.பி-யின் தலைவர்கள் முழுச் சீருடையில் கொழும்பெங்கும் கொண்டு திரிந்து நினைவேந்துவதைக் குறித்துக் கேள்வி எழுப்பியதில்லை. இதனால் தான் நான் இந்தச் சபையில் நினைவேந்தும் விடையத்தில் கூட தமிழருக்கெதிராகப் இனவாதம் பாய்ச்சப்படுவதைப் பற்றிப் பேசியிருந்தேன்.

யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி, மிகத் தெளிவாக அம்மா தன் மகனை வீட்டில் நினைவு கூருவதற்கு முழுமையான உரிமை இருப்பதாகச் சொல்லியிருந்தார். அம்மா தன் உரித்தை வீட்டில் செயற்படுத்தினார். வீடில்லை அதைக் கொட்டில் என்றே கூற வேண்டும். அம்மா தன் மகனைத் தன் கொட்டிலில் நினைவு கூர்ந்த போது நானும் அவரோடு இணைந்திருந்தேன். அவரருகில் நின்றேன். மகன் எந்தவொரு சீருடையைக் கூட அணிந்திருக்கவில்லை. இது தாயொருவர் தன் மகனை நினைவேந்திய செயற்பாடு. கூட்டாக எவரும் நினைவேந்தலில் முடியாத போதும் எல்லோரும் தனிப்பட்ட நினைவேந்தலில் ஈடுபடலாம் என்பதை என் மனுதாரருக்கு விளக்குமாறு நீதிமன்றம் என்னைப் பணித்திருந்தது.

சரத் வீரசேகரவின் இது வித இனவதாகக் கருத்துக்களால் முழு நாடும் தவறாக வழி நடத்தப்படுகிறது. அதை இச் சபை அனுமதிக்கிறது," என்றார்.

No comments