ஈழத்தில் பிரச்சினையில்லை: மகிந்த



ஈழம் என்ற சொல்லில் எவ்வித பிழையும் கிடையாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனை தெளிவுபடுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா என்பதற்கு சிங்கள மொழியில் பல்வேறு பெயர்கள் உண்டு. அதேபோன்று இலங்கை என்பதற்கு ஈழம் என்ற ஓர் மாற்றுப் பெயர் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஈழம் என்ற சொல் தமிழ் பிரிவிணைவாதத்திற்காக பயன்படுத்தப்படுவதாக ஓர் மாயை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இது எந்த வகையிலும் நியாயமானதல்ல எனவும்,இதனை தகர்த்து எறிய வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர் டொக்டர் அப்துல் காலாம் கூறுவது போன்று “நான் முதலில் இந்தியன் தமிழ் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய மதத்தை வழிபாடு செய்கின்றவன்” என்று கூறுவதில் தவறில்லை.எந்தவொரு தமிழ் புத்திஜீவியிடமும் இது குறித்து கேட்கலாம் ஈழம் என்பது இலங்கைக்கான மறுபெயரே தவிர அது பிரிவிணைவாத சொல் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

ஈழம் என்ற சொல்லுக்கு இலங்கையில் தடையில்லை அதனை எவ்வாறு சட்டவிரோதமான சொல்லாக கருத முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.எமது தேசிய கீதத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு காணப்படுகின்றதல்லவா? அதில் ஈழம் என்ற சொல் உள்ளது அல்லவா? ஈழ சிரோமணி என்ற சொல் தேசிய கீதத்தில் காணப்படுகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.<

இலங்கை, ரத்தினதீபம் என்பது போன்றே இலங்கைக்கு ஈழம் என பெயருள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஈழத்திற்காக போராடவில்லை அவர் தமிழீழத்திற்காக போராடினார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈழம் என்ற சொல் அடிப்படைவாதமாக கருதப்படவே முடியாது எனவும், அவ்வாறு கருதினால் அது பாரதூரமான தவறு எனவும், நாட்டை பிளவடையச் செய்வதற்கு தாம் ஆதரவளிக்கும் நபர் கிடையாது என்ற போதிலும் ஈழம் என்ற சொல்லை பிரிவிணையாக கருதுவது இன்னும் மக்களை பிளவுபடுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள மக்கள் தமிழர்களை எதிர்க்கின்றார்கள், தமிழ் மக்கள் சிங்களவர்களை எதிர்க்கின்றார்கள் என்ற மாயை காணப்படுகின்றது இவ்வாறான மாயைகள் தகர்க்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments