பிரித்தானியாவில் நடைபெற்ற இணையவழி நினைவெழுச்சி நாள்

லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகளினதும்  மற்றும் 2ம் லெப்.மாலதியினதும் நினைவு வணக்க நிகழ்வு பிரித்தானியாவில் இணைய வழியூடாக எழுச்சி

கொள்ளப்பட்டது.

இற்றைக்கு 33 ஆண்டுகளுக்கு முன்  ஒக்டோபர் மாதம் 3ம் நாள் 1987ம் ஆண்டு கடலில் வைத்து கடற்புறாவில் பயணித்த  17 வேங்கைகள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு, பலாலியில் வைத்து பின்னர் கொழும்பு கொண்டு செல்ல புறப்பட்ட வேளையில் தம் கொள்கையின் வழி நின்று ஒக்டோபர் மாதம் 5ம் நாள் சயனைட் அருந்திய வேளையில்  வீரகாவியமான 12 வேங்கைகளான குமரப்பா, புலேந்திரன், அப்துல்லா, ரகு, நளன், ஆனந்தக்குமார், மிரேஸ், அன்பழகன்,ரெஜினோல்ட், பழனி, கரன், தவக்குமார் ஆகியோரினதும்  1987ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோப்பாய் நகரை நோக்கி இந்தியப்படை நடாத்திய தாக்குதலை  எதிர்த்து  அதற்கு எதிர் தாக்குதல் நடத்தியபோது, இருகால்களிலும் குண்டடிபட்டு நகர்வை தொடரமுடியாமல் இந்தியப் படை சுற்றிவளைத்த போது சயனைட் அருந்தி வீரச் சாவினைத் தழுவிக்கொண்ட முதல் பெண் போராளி 2ம் லெப் மாலதி ஆகியோரது நினைவு வணக்க நிகழ்வும்  இன்று 11.10.2020 ஞாயிற்றுக்கிழமை இணைய வழியினூடாக நடைபெற்றிருந்தது.

நிகழ்வில் பொதுச் சுடரினை லெப்.கேணல் குமரப்பாவின் மனைவி ரஜனி அவர்கள் ஏற்றிவைத்தார். தமிழீழத் தேசியக் கொடியினை லெப்.கேணல் புலேந்திரன் அவர்களின் மகன் தர்மசீலன் அவர்கள் ஏற்றி வைத்தார், தொடர்ந்து ஈகைச் சுடரினை உணர்வாளர் மணிவண்ணன்ஏற்றிவைக்க, திருவுருவப் படங்களுக்கான மலர் மாலையினை சிறுத்தைப் படையணியைச் சேர்ந்த களப்போராளி தேவராஜா தேவதர்சினி அவர்கள் அணிவித்திருந்தார்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் எழுச்சி உரை,கவிதை, நடனம், நினைவுரை, உறுதியுரை போன்ற எழுச்சி நிகழ்வுகளும் அரங்கேறியிருந்தன.

இந்திய வல்லூறுகளின் சதியில் வித்தாகிப் போன வீரமறவர்களுக்கு உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் தங்கள் வணக்கத்தினை செலுத்தியிருந்தார்கள்.

நமது தேசியத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்ட ஒக்டோபர் 10, தமிழீழ பெண்கள் எழுச்சி நாளும் இன்றைய நாளில் நினைவுகொள்ளப்பட்டது. தமிழீழப் பெண்களின் வீரத்தையும் தியாகத்தையும் பலர் தங்கள் உரைகள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்கள்.










No comments