அம்பாறையில் இருவருக்கு கொரோனா


கம்பஹா ஆடை தொழிற்சாலையில் பணியாற்றி விடுமுறை பெற்று அம்பாறை பகுதியில் உள்ள வீடுகளுக்கு வந்த இருவர் கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் இரு கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இன்று(6) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல் போன்ற சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் மீறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் பொதுப் போக்குவரத்துகளில் பயணிக்கும் மக்கள் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். தற்போது கல்முனை பிராந்தியத்தில் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்த 32 பேர் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளுக்கு யாரும் செல்ல வேண்டாமெனவும் சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் வெளியில் செல்ல வேண்டாம். இதனை உதாசீனம் செய்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வெளி மாவட்டங்களில் இருந்து எமது பிரதேசத்துக்கு வருபவர்கள் தொடர்பாக அறிவிக்குமாறும் கேட்டுள்ள அவர் பொதுமக்கள் ஒன்றுகூடும் சந்தைகள் வணக்கஸ்தலங்கள் ஆகிவற்றில் சுகாதார நடைமுறைகளைப் பேணுமாறும் கேட்டுள்ளார்.

இதே வேளை மற்றுமொரு பஸ் நடத்துநரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளில் சுகாதாரப் பகுதியினர் சிவில் உடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

No comments