தராகி கொலை :உத்தரவிட்ட லக்ஸ்மன் கதிர்காமர்?


ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலைக்கான உத்தரவை இலங்கை முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமரே பிறப்பித்திருந்தார்.தனது சிபார்சினை அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்காவின் கவனத்திற்கு லக்ஸ்மன் கதிர்காமர் எடுத்துச்சென்றிருந்த நிலையில் வழமையான அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் ஊடாக தராகி சிவராம் படுகொலை அரங்கேற்றப்பட்டதாக முன்னணி ஆங்கில இணையமான தமிழ் நெட் இன் பிரதம ஆசிரியரும் தராகி சிவராமின் நெருங்கிய சகாவுமான ஜெயச்சந்திரன் அம்பலப்படுத்தியுள்ளார்.

வன்னியில் விடுதலைப்புலிகள் தலைமையுடனான சந்திப்பொன்றின் போது சான்றுகளினதும் அரச புலனாய்வு கட்டமைப்புக்களது உள்ளக முகவர்களது தகவல்களின் அடிப்படையிலும் இதனை உறுதிப்படுத்தி அவர்கள் தெரிவித்திருந்ததாகவும் ஜெயச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னைய ரணில் அரசுடனான விடுதலைப்புலிகளது சமாதான பேச்சுக்களின் போது முகவராக செயற்பட்டு வந்திருந்த எரிக்சொல்ஹெய்மின் கடந்தகால செயற்பாடுகள் தொடர்பிலான காணொலி உரையாடல் ஒன்றின் போதே தமிழ் நெட் பிரதம ஆசிரியர் ஜெயச்சந்திரன் இதனை அம்பலப்படுத்தியுள்ளார்.


அப்போதைய சூழலில் இலங்கை அரசபுலனாய்வு பிரிவின் முகவர்களாக செயற்பட்டு வந்திருந்த தமிழ் துணை ஆயுதக்குழுக்களது உறுப்பினர்கள் ஊடாக முன்னணி செயற்பாட்டாளர்கள் வேட்டையாடப்பட்டு வந்திருந்தனர்.கடத்தல்கள் மற்றும் கொலைகள் அத்தகைய தரப்புக்களின் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வந்தது.

அவ்வாறே இலங்கை அரச உயர்மட்ட பணிப்பின் பிரகாரம் தராகி சிவராம் கொழும்பு பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தப்பட்டதுடன் இலங்கை நாடாளுமன்றிற்கு அருகில் கொல்லப்பட்ட பின்னராக சடலமாக வீசப்பட்டிருந்தார்.

2000ம் ஆண்டு முதல் 2010 வரையான காலப்பகுதியில் 39இற்கும் அதிகமான தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டோ அல்லது காணாமலோ ஆக்கப்பட்டிருந்த  போதிலும் கொலையாளிகள் எவரும் தண்டிக்கப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. 

   


No comments