மகிந்த குடும்ப சங்கரில்லா ஹோட்டலுக்கும் பூட்டு


கொழும்பிலுள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதிகளின் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று,  நட்சத்திர விடுதிகளின் நிர்வாகங்கள் அறிவித்துள்ளன.

ஹில்டன், கோல்பேஸ் ஹோட்டல்களின் பணிகளே இவ்வாறு இடைநிறத்தப்பட்டுள்ளன. 

ஹில்டன் ஹோட்டலானது, வெள்ளிக்கிழமை (23) முதல் தனது பணிகளை இடைநிறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. 

மேற்படி ஹோட்டலை அண்மித்தப் பகுதியில், கொரோனா தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளார் என்று, கொழும்பு மாநகர சபை உறுதிபடுத்தியுள்ள நிலையில், குறித்த தொற்றாளர் ஹோட்டல் வளாகத்தைச் சேர்ந்தவரா என்பதுத் தொடர்பில் இதுவரை உறுதிபடுத்தவில்லை என்றும் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

இதேவேளை கோல்பேஸ் ஹோட்டலின் பணிகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

ஹோட்டலின் அனைத்துப் பணிகளையும் இடைநிறுத்துமாறும் ஹோட்டலில் பணியாற்றும் சகல ஊழியர்களையும் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் பொதுசுகாதார பரிசோதகர்கள் ஹோட்டல் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியுள்ளதாகத் தெரியவருகிறது. 

இதேவேளை சங்கரிலா ஹோட்டலின் பணிகளையும் இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில் அந்த ஹோட்டலில் நடைபெறவிருந்த நிகழ்வுகளையும் நிறுத்துமாறு, பொது சுகாதார பரிசோதகர்கள் பணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

இதனிடையே கம்பஹா மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை நீக்க இலங்கை ரசு பின்னடித்துள்ளது.

இன்று காலை நீக்குவதுத் தொடர்பில் இதுவரை தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என்று, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த மாவட்டத்தில் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ள வேளையில், மக்களுக்குத் தேவையான அத்தியசாவசியப் பொருள்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்  தெரிவித்தார். 

மூன்று தினங்களுக்கு மேல் ஊரடங்குச்சட்டம் அமுலிலுள்ளப் பகுதிகளில் வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை, விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.  


No comments