ஊடகவியலாளரின் நினைவாக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம்!
ஊடகவியலாளரின் நினைவாக ஒரு லட்சம் பெறுமதியான புலமைப்பரிசில் திட்டம் மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் ஞாபகார்த்த புலமைப்பரிசில் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
ஊடகக்கற்கை நெறியைத் தொடரும் வறுமைக்கோட்டுக்குட்பட்ட மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இலண்டனில் வசிக்கும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கீத் குலசேகரத்தின் வழிகாட்டலில் குறித்த செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இத்திட்டத்தின் முதற்கட்டமாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கை நெறியை தொடரும் மாணவி ஒருவர் தெரிவு செய்யப்பட்டு அவரின் கல்விச் செயற்பாட்டை ஊக்குவிக்;கும் வகையில் ஒரு வருடத்திற்கான செலவாக ஒரு இலட்சம் பெறுமதியில் புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அமரர் அஸ்வினின் சகோதரரான ஊடகவியலாளர் சுகிர்தனால் மேற்படி திட்டத்திற்கான உதவி வழங்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் பி.உயாந்தனின் தலைமையில் அவரது அலுவலதகத்தில் இடம்பெற்ற மேற்படி புலமைப்பரிசில் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பாதுகாவலன் பத்திரிகையின் ஆசிரியர் அருட்பணி எஸ்.ஏ.றொகான் அடிகளாரும் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஆசிரியர் அருட்பணி அன்ரன் துஸியந்தனும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் லூ.அனுஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் அமரர் அஸ்வினின் உருவப்படத்துக்கு தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி இடம்பெற்றது. அதனை தொடர்ந்து விருந்தினர்களின் உரை இடம்பெற்றது.
தொடந்து தெரிவு செய்யப்பட்ட மாணவிக்கான புலமைப்பரிசிலை அமரர் அஸ்வினின் பெற்றோர் வழங்கி வைத்தனர்.
Post a Comment