சி.விக்கு ஆதரவாக டெனீஸ்வரன் சிக்சர்?

நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முன்னிறுத்தி அவரை

உள்ளே தள்ள அரசு முற்பட்டுள்ள நிலையில் அவ்வழக்கிலிருந்து விலக முன்னாள் வடமாகாண அமைச்சர் டெனீஸ்வரன் அதிரடி காட்டியுள்ளார். 

எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முன்னாள் முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன் என வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்திருக்கின்றார்.

சி.வி.விக்னேஸ்வரன் மீது டெனீஸ்வரன் தொடுத்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெற வேண்டும் என சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன் உட்பட பலர் முன்வைத்துள்ள கோரிக்கைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் வெளியிட்டுள்ள முகப்புத்தகப் பதிவிலேயே டெனீஸ்வரன் இதனைத் தெரிவித்திருக்கின்றார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

என்னுடைய நோக்கம் முன்னாள் முதலமைச்சரை சிறையில் அடைக்க வேண்டும் என்பதல்ல, எந்த தவறும் செய்யாமல் வீண்பழி சுமத்தியது பிழையென்பதை உணர்த்த வேண்டும் என்பதற்காகவே வழக்குத் தொடுத்தேன்.

அந்த நேரத்தில் எவரும் இதில் உள்ள நியாயப்பாடுகளை சீர்தூக்கிப் பார்க்க முன்வரவில்லை. எனக்கு பக்கபலமாக இருந்தது என்னுடைய நியாயப்பாடு ஒன்று மட்டுமே.

கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும், இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார்.

முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன் என பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments