சி.விக்கு கைகொடுக்க தேசியம் பேசுபவர்கள் தயாரா?



நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் கருதக்கூடியவர்கள் விக்னேஸ்வரன்  கருத்துக்கு சாதகமாக ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஆனால் இது தொடர்பாக ஆரம்பதில் யாரும் வாய் திறக்கவில்லை. பத்திரிகைகளின் செய்திகளுக்கு பிற்பாடு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில கருத்துக்களை கூறினாலும் கூட இந்தக் கருத்துக்கு சாதாகமாக ஆணித்தரமாக பாராளுமன்றத்தில் ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணை பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன்.

தேர்தல் முடிந்து நாடாளுமன்றம் தனது கூட்டத் தொடர்களை ஆரம்பித்துள்ளது. நாடாளுமன்றத்தில் விக்னேஸ்வரன் ஐயா கூறிய சில கருத்துக்கள் சிங்கள பௌத்த பேரினவாதிகளால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களாக உள்ளன. உண்மைக்குப் புறம்பான எதையும் அவர் பேசவில்லை. அவர் பேசியது என்பது தமிழ் என்பது உலகத்தின் தொன்மையான மொழி உலகத்தில் முதன்மையான மொழி இலங்கையில் தமிழ் மக்கள் பூர்வீகமாக குடி மக்களாக இருக்கின்றார்கள். அவ்வாறான ஒரு மொழியால் புதிதாக தெரிவு செய்யப்பட்ட சபாநாயகரை வாழ்த்துவதில் தான் பெருமைப்படுவதாகக் கூறியிருந்தார். இந்த இனத்துக்கு சுய நிர்ணய உரிமை, இiறாயண்மை என்பன இருக்கின்றது என்பதைக் கூறியிருந்தார்.


இந்த விடயம் தான் சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விடயமாக இருக்கின்றது. விக்னேஸ்வரன் ஐயாவின் கருத்து சிங்கள, தமிழ் சர்வதேச வரலாற்றாசிரியர்களைப் பொறுத்தவரையில் அது பிழையான கருத்து அல்ல. ஆகவே, அது பிழையான கருத்து என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருதுவார்களாக இருந்தால் தமது சரியான கருத்துக்களை நாடாளுமன்றத்தில் கூறி அதனை ஹன்சாட்டில் பதிவு செய்ய முடியும். அதனை விடுத்து ஹன்சாட்டில் இருந்து நீக்கும் படி கூறுவது என்பது முதலில் நாடாளுமன்றத்தில் இருக்கக் கூடிய பேசுவதற்கான சுதந்திரத்தை மறுதலிப்பதாகும். அதனை சபாநாயகர் ஏற்றுக் கொள்ள வில்லை என்பதும் பாராட்டப்படக் கூடிய விடயம்.


சிங்கள ஊடகங்களிலும் ஆளுங்கட்சி எதிர்க்கட்சியில் இருக்ககூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சல சலப்புக்களை ஏற்படுத்தி விக்னேஸ்வரன் ஒரு பிரிவினைவாதி என்றும் இனவாதி என்றும் இவர் நாடாளுமன்றத்தில் இருக்க கூடாது என்றும் விரட்டி அடிக்கப்பட வேண்டும் என்றும் பிரபாகரன், அமிர்தலிங்கம் போன்றோருக்கு ஏற்பட்ட கதியே இவருக்கு ஏற்படும் என்றும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட பலர் நாடாளுமன்றத்தில் மிக மோசமான முறையில் தமது வார்த்தைப் பிரயோகங்களை கூறிவருகின்றார்கள்.


இவ்வாறான கருத்துக்களால் நாங்கள் பயந்து ஓடி ஓழியப்போவது இல்லை. விக்னேஸ்வரன் ஐயா தனது கருத்தை மிகத் தெளிவாகக் கூறியிருக்கின்றார். நான் கூறிய இந்தக் கருத்துக்கள் நீங்கள் தவறு என்று கருதுவீர்களாக இருந்தால் ஒரு விசாரணைக் குழுவை அமையுங்கள் அதில் சர்வதேச உள்நாட்டு வரலாற்று ஆய்வாளர்களை நிறுத்தி அதனூடாக நான் சொன்னதில் தவறு இருந்தால் அதை நிரூபியுங்கள் என்று கூறியுள்ளார்.


ஆகவே, பந்து இப்பொழுது அவர்களுடைய பக்கத்தில் இருக்கின்றது. விசாரணைக் குழுவை அமைக்கப் போகின்றார்களா? இலங்கையின் பூர்வீக குடிமக்கள் யார் என்று அறியப்போகின்றார்களா? அல்லது பொய்யையும் புனை கதையையும் சொல்லப்போகின்றார்களா? சிங்கள மக்கள் உண்மையை அறிந்தால் இந்த நாட்டினுடைய பிரச்சினை தீர்ப்பதற்கு வழிவகுக்கும். ஆனால் சிங்கள மக்களுக்கு உண்மை மறுதலிக்கப்படுகின்றது.


பாடப்புத்தகங்களில் தாங்கள் வரலாற்று ஆசிரியர்கள் என்று கூறக்கூடிய இனவாதிகள் தமிழர்கள் இந்த மண்ணுக்கு சொந்தமில்லை என்றும் சிங்கள மக்களே இந்த மண்ணின் மைந்தர்கள் என்று கூறுகின்ற போக்கையும் நாங்கள் பார்க்கின்றோம். அது அவ்வாறு இல்லை இந்த மண்ணின் ஆதிக் குடிமக்கள் தமிழர்களே! ஆகவே, எங்களுக்கு சமத்துவமான உரிமை, இறையாண்மை இருக்கின்றது.


இது ஒன்றும் விக்னேஸ்வரன் ஐயாவினுடைய கருத்து இல்லை. ஒட்டுமொத்த தமிழ் மக்களினுடைய கருத்தாகும். இலங்கை சுதந்திரமடைந்த வரலாற்றைப் பார்த்தால் 1956 ஆம் ஆண்டு தனிச் சிங்களச்சட்டம் கொண்டு வந்த போது பருத்தித்துறையைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன் கந்தையா என்பவர் ஒரு நீண்ட உரையை ஆற்றியிருந்தார். தமிழ் மக்களினுடைய பாரம்பரியம், தொன்மை போன்றவற்றை ஏறத்தாள ஐந்து மணித்தியாலங்களாக உரையாற்றியிருந்தார்.


நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்களாக தங்களைக் கருதக்கூடியவர்கள் விக்னேஸ்வரன் ஐயாவினுடைய கருத்துக்கு சாதகமாக ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது அவர்களுடைய கடமை. ஆனால் இது தொடர்பாக ஆரம்பதில் யாரும் வாய் திறக்கவில்லை. பத்திரிகைகளின் செய்திகளுக்கு பிற்பாடு ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில கருத்துக்களை கூறினாலும் கூட இந்தக் கருத்துக்கு சாதாகமாக ஆணித்தரமாக பாராளுமன்றத்தில் ஒட்டு மொத்தமாக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவர்கள் குரல் கொடுக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் வந்து நாங்கள் தான் தமிழ் தேசியத்தின் பாதுகாவலர்கள் வேறு யாரும் இல்லை என்று ஏட்டிக்குப் போட்டியாக கூறக்கூடிய அனைவரும் இதனை யோசிக்க வேண்டுமட என்பதும் எனது தாழ்மையான கருத்தாகும்.


தமிழ் மக்களுக்கான சரியான பாதை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கம் இவ்வளவு காலமும் எங்களுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வந்தது. அதாவது தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் அனைவரும் இனவாதிகள் என்று சொல்ல முற்பட்டார்கள். பிரபாகரன், தந்தை செல்வநாயம், அமிர்தலிங்கம் மற்றும் இன்று நாடாளுமன்றம் செல்லக் கூடிய கட்சித் தலைவர்கள் அனைவரும் இனவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் அவர்கள் தான் இனவாதியாக செயற்படுகின்றார்கள் என்பது வெளிப்படையாக தெரிகின்றது.


ஜனாதிபதி, பிரதமர், விமல் வீரவன்ச போன்றோரின் கருத்துக்களே சிங்கள பௌத்த இனவாதத்தின் கருத்துக்களாக வெளிப்படையாகத் தெரிகின்றது. இலங்கை என்பது நிறைவான ஒரு அபிவிருத்தியை நோக்கி போக வேண்டுமாக இருந்தால் இலங்கையில் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். அந்த அரசியல் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களுடைய உரிமைகள் வழங்கப்பட வேண்டும்  என்றார்

No comments