கொரோனா நோயாளிகள் வெளியே வந்து போகின்றனராம்?



“தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் இரவில் பிலிமத்தலாவ நகருக்கு வருகின்றார்கள் ” என்ற தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை - மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

கடந்த 1ம் திகதி, கொவிட் 19 னைக் கட்டுப்படுத்துவதற்காக, மத்திய மாகாணத்தில் நடத்தப்பட்ட குழு கூட்டத்தில், தாம் கூறிய கருத்தொன்றை ஊடகங்கள் திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர், அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.

கிராகம ஆசிரியர் கலாசாலையில் அமைக்கப்பட்டுள்ள, தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளவர்கள், இரவு நேரங்களில் பிலிமத்தலாவ நகருக்கு வருவதாக மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார், என 3 ம் திகதி “ அத” மற்றும் “திவயின” பத்திரிகைகளிலும்  இணையத்தளத்திலும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

எனினும், தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை எனவும், அவ்வாறான சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது குறித்து விசாரிக்க வேண்டுமென தான் தெரிவித்ததாகவும் மத்திய மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர், அர்ஜுன திலகரத்ன தெரிவித்துள்ளார்.

No comments