தமிழகத்தில் தீவிரமடைகிறது கொரோனா! இன்று மட்டும் 11 பேர் பலி;

தமிழகத்தில் இன்று மேலும் 1,162 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 23,495 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று மேலும் 1,162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் 50 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மொத்த பாதிப்பு 23,495 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 72 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று ஒரே நாளில் 11,377 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்று சென்னையில் 9 பேரும், திண்டுக்கல், புதுக்கோட்டையில் தலா ஒருவர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளதால் தமிழகத்தில் மொத்த பலி எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் கொரோனா பாதிப்பு, இன்றும் அதிகபட்சத்தை எட்டியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 1,162 பேரில் சென்னையில் மட்டும் 967 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ஒரே நாளில் 900ஐ கடப்பது இதுவே முதல்முறையாகும். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15,770 ஆக அதிகரித்துள்ளது. இன்றைய பாதிப்புகளில் செங்கல்பட்டில் 48 பேர், திருவள்ளூரில் 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரே நாளில் 413 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 13,170 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 10,138 பேர் சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 1,322 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் 19,961 பேரும், 60 வயதை கடந்தவர்கள் 2,212 பேரும் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments