தேர்தல் அறிவிப்பினால் தொழில் இழப்பு?

கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட செயற்திட்ட உதவியாளர் நியமனம், ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வழங்கப்பட்டு விட்டது. இது தேர்தல் கால நியமனம் அல்ல. செயற்திட்ட உதவியாளர்களிற்கு நியமனம் வழங்காமல் அரசு இழுத்தடிப்பதால், யாழ் மாவட்டத்தில் 999 செயற்திட்ட உதவியாளர்கள் நிர்க்கதியாகியுள்ளனர் மேற்கண்டவாறு யாழ்.மாவட்ட செயற்றிட்ட உதவியாளா்கள் சங்கம் கோாிக்கை விடுத்துள்ளது.
பட்டாாரிகள் எப்படி, வேலைவாய்ப்பிற்காக ஏங்குகிறார்களோ, அதேபோன்ற நிலைமையிலேயே எமது வாழ்க்கையும் உள்ளது. இதனால், பட்டதாரி நியமனத்துடன், செயற்திட்ட உதவியாளர் நியமனத்தையும் அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து யாழ்.ஊடக அமையத்தில் இன்று (6) இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பின்போதே அவா்கள் மேற்கண்டவாறு கோாிக்கை விடுத்திருக்கின்றனா்.
இதன்போது மேலும் அவா்கள் கூறுகையில்,
செயற்திட்ட உதவியாளர் பதவிக்கு 2019.05.10ஆந் திகதி முடிவு திகதி இடப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியின் பிரகாரம் இவ் அமைச்சுக்கு அகில இலங்கை ரீதியில் விண்ணப்பதாரிகளால் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மேற்படி விண்ணப்பங்களுக்கான நேர்முகப்பரீட்சை 2019.06.10 இல் அலரி மாளிகையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டாவது நேர்முகப் பரீட்சை 2019.08.09 இல் நடைபெற்று முடிந்தது. பின்னர் தகுதியுடைய விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குரிய 2019.09.16ம் திகதியிடப்பட்ட நியமன கடிதங்கள் பதிவுத் தபால் மூலம் மேற்படி அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் அனுப்பி வைக்கப்பட்டது.
அகில இலங்கை ரீதியில் 6547 பேரும் யாழ் மாவட்ட ரீதியில் 999 பேரும் நியமனம் பெற்றிருந்தனர். இதன் பிரகாரம் யாழ் மாவட்ட செயலகத்திற்கு சென்று தமது கடமைகளை பொறுப்பேற்று கையொப்பமிட்டு வந்தனர். மேற்படி நியமனம் வழங்கப்பட்ட காலப்பகுதியானது கடந்த ஜனாதிபதி தேர்தல் காலமாக அமைந்ததால் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரியவினால் அனைத்து மாவட்ட செயலகங்களுக்கு நியமனத்தை தற்காலிக இடைநிறுத்தம் செய்யப்படுவதாக ஒரு தொலைநகல் அனுப்பி வைக்கப்பட்டது. இதன் படி மாவட்ட செயலக அதிபரினால் தேர்தல் முடிவடைந்த பின்னரே பணிக்கு அமர்த்த முடியும் எனக் கூறி அனைவரையும் அனுப்பி வைத்தனர்.
ஆயினும் தேர்தல் தொடர்பான வர்த்தமானியானது 2019.09.18ஆந் திகதி வெளியிடப்பட்டது. எனவே தேர்தல் தொடர்பான சட்ட ரீதியான அறிவிப்புக்கள் வெளியிடப்படுவதற்கு முன்பாகவே நியமனம் வழங்கப்பட்டுள்ளது என்பதை நாம் இத்தருணத்தில் எடுத்துக் காட்டுகின்றோம். இதனை தொடர்ந்து ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த பிற்பாடு மீண்டும் தமது கடமைகளை பொறுப்பேற்க சென்ற நியமனதாரிகளிற்கு மாவட்ட செயலரினால் எமது நியமனம் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் மற்றும் குறித்த அமைச்சினால் எவ்வித அறிவிப்புக்களும் வழங்கப்படவில்லை எனகூறி நியமனதாரிகள் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டதால் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
பின்னர் இந் நியமனம் தொடர்பாக ஆராய்ந்த தேர்தல் ஆணையாளர் நியமனதாரிகளை இணைத்துக் கொள்ளுமாறு மீண்டும் தொலைநகல் மாவட்ட செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பிற்பாடு நிதி அமைச்சினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட எமது நியமனம்தொடர்பாக இன்று வரை எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.  இது தொடர்பாகஆர்ப்பாட்டங்கள் உண்ணாவிரதங்கள் மேற்கொள்ளப்பட்டது. 2020 மார்ச் மாதம் 03ம் திகதியளவில் தேர்தல் ஆணையாளர் மீண்டும் ஒரு ஊடக சந்திப்பை மேற்கொண்டு, தான் இந்நியமன இடைநிறுத்தத்தை நீக்கியதாகவும் ஆனால் அரசாங்கம் இதை வழங்கவில்லையெனவும் அரசாங்கத்திற்கு இது தொடர்பில் பரிந்துரை செய்கின்றேன் எனவும் கூறினார். மேலும் கடிதங்கள் மற்றும் தொலைநகல்கள் அகில இலங்கை ரீதியில் புதிய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலும் இன்று வரை அரசு மௌனித்து வருகின்றது.
பல்வேறு எதிர்பார்ப்புக்கு மத்தியில் தனது சொந்த முயற்சியையும் திறமையையும் நிருபித்து அரச நியமனத்தை பெற்ற எங்களுக்கு இந் நியமனம் வாழ்வாதாரத்தையே தீர்மானித்திருந்தது. இந்தநிலையில் குடும்ப வருமானமும் இன்றி தவிக்கின்றனர். உயர் தர கல்வியை கற்று முடித்தும் தகுந்த வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் சாதாரண கூலி வேலையை செய்து தமது நாளாந்த வாழ்க்கையை கொண்டு நடத்தி கொண்டு வருகின்றோம். அதே சமயத்தில் தனியார் நிறுவனங்களில் வேலை செய்தவர்கள் நியமனம் கிடைக்க பெற்ற பின்னர் அந்த வேலையையும் விட்டுவிட்டு இந்த வேலையும் கிடைக்காமல் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றோம்.
தற்கால அரசாங்கம் தொடர்ச்சியாக நல்லாட்சி அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வேலைவாய்ப்புக்களை கருத்தில் கொள்ளாது செயற்பட்டு வருவதால் இந் நியமனம் கிடைக்காது எமது வாழ்வாதாரம் இன்று கேள்விக்குறியாகியுள்ளது.
தற்காலத்தில் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனதாரர்களின் இடைநிறுத்தத்தினால் அவர்கள் அனுபவிக்கும் வாழ்வாதார பிரச்சினையை தொடர்ச்சியாக முன்பிருந்து செயற்திட்ட நியமனதாரிகளும் அனுபவித்து வருகின்றோம் என்பதனை தற்போதைய அரசுக்கு எடுத்துக் காட்டுவதுடன் தற்போதைய அசாதாரண சூழ்நிலையில் நாமும் இன்று சமூக ரீதியில் பல்வேறு இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் தள்ளப்பட்டுள்ளோம். இந் நிலையில் தொடர்ச்சியாக எமது நியமனத்தினை பெற்றுக் கொள்ளும் செயற்பாட்டில் தொடர்ந்தும் முயற்சித்து வருகின்றோம்.
எனவே இவ் 6547 குடும்பங்களின் வாழ்வாதாரம் தொடர்பாக அரசு தொடர்ச்சியான மௌனங்களை தவிர்த்து இந் நியமனத்தை அரசாங்கம் உத்தியோக பூர்வமாக எங்களுக்கு இந்த நியமனத்தை வழங்குவோம் என்பதை ஆதாரபூர்வமாக வெளியிடுமாறும் நாட்டு மக்களின் சுபீட்சத்துக்கும் வழிவகுக்க வேண்டும் என்று யாழ் மாவட்ட செயற்றிட்ட உதவியாளர் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம்.

No comments