வடக்கு மக்களிற்கு ஆலோசனை!

நாளை (11) முதல் ஊரடங்கு தளர்வின் போது வடக்கு மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் மாகாண சுகாதார பணிப்பாளர்

ஆ.கேதீஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.

இதன்படி,

வேலைக்கு செல்வோர், அத்தியாவசிய விடயங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களினை கொள்வனவு செய்ய வெளியே செல்வோர் தவிர்ந்த ஏனையவர்கள் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
அத்தியாவசிய தேவைகளிற்கு வெளியே செல்பவர்கள் தாம் செய்ய வேண்டிய வேலைகளுக்காக அடிக்கடி வெளியே செல்லாது ஒரே தடவையில் பல கருமங்களினை நிறைவேற்றிக் கொள்ள கூடியவகையில் திட்டமிட்டு செயற்படவும்.
வெளியே செல்பவர்கள் அலுவலகங்களிலும் பொது இடங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் பொதுப் போக்குவரத்தின் போதும் இரண்டுபேருக்கு இடையில் ஆகக் குறைந்தது 1 மீற்றர் தூர இடைவெளியில் பேணவும்.
வெளியில் செல்லும்போது இயன்றளவு பிரத்தியேக போக்குவரத்து முறைகளினை பாவிக்கவும்.( உதாரணமாக நடந்து செல்லல், துவிச்சக்கரவண்டியில் செல்லல்).
அலுவலகங்கள் வர்த்தக நிலையங்கள் பொது இடங்கள் என்பவற்றிற்கு உள்ளே நுழையும் முன்னர் கைகளினை சவர்க்காரமிட்டு முறைப்படி கழுவிக் கொள்ளவும்.
வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பின்பும் கைகளினை சவர்க்காரமிட்டு முறைப்படி கழுவிக்கொள்ளவும்.

காய்ச்சல், இருமல், தொண்டைநோய் போன்ற அறிகுறிகள் உடையவர்கள் பொது இடங்களிற்கு செல்வதனை தவிர்த்தல் வேண்டும்.
ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொது நிகழ்வுகள் வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் போன்றவற்றிற்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதனை மனதில் கொள்ளவும்.
இயன்றளவு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளினையே உண்பதனை பழக்கப்படுத்திக் கொள்வதுடன் உணவகங்களில் இருந்து உணவினை பெறவேண்டி இருப்பின் உணவினை எடுத்துச் சென்று உட்கொள்ளவும். மேலும் உணவகங்களில் ஒன்றுகூடி உணவு அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும்.
உங்கள் பிரதேசத்திற்கு யாரவது புதியவர்கள் வருகை தந்திருந்தால் உங்களது பகுதி சுகாதார வைத்திய அதிகாரி, பொதுசுகாதார பரிசோதகர் அல்லது கிராமசேவையாளருக்கு அறியத்தரவும். அவர்களை தொடர்பு கொள்வதில் சிரமம் இருப்பின் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் அவசர அழைப்பெண் 021-222-6666 இற்கு தகவல் வழங்கவும்.
என்று அவர் வலியுறுத்தியுள்ளார்

No comments