பிரான்சில் ஈழத்துக் கலைஞர் கொரோனாவால் உயிரிழப்பு!

பிரான்சில் கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகி ஈழத்தமிழ் கலைத்தாயின் மூத்தமகன் ஏ.இரகுநாதன் உயிரிழந்துள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்தமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று மதியம் 14:00 மணியளவில் உயிர்பிரித்தார் என்ற செய்தி மருத்துமனையினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மலேசியாவில் பிறந்து யாழ்ப்பாணம் நவாலியில் வாழ்ந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் படித்தவர்.

ஏ. ரகுநாதன் ஈழத்தின் மூத்த கலைஞர்களில் ஒருவர். மேடை நாடகம், திரைப்படம், வானொலி, குறுந்திரைப்படங்கள் என்று பல்வேறு தளங்களில் செயற்பட்டு வந்தவர்.

கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் மாணவன். தற்போது பிரான்ஸ் நாட்டில் வாழ்ந்து வந்தவர்.

ஈழத்தின் நான்காவது திரைப்படமாக ‘நிர்மலா’ வைத் தயாரித்தளித்தவர். ‘நெஞ்சுக்கு நீதி’ ‘புதியகாற்று’ ஆகிய திரைப்படங்களில் சிறு பாத்திரங்களில் நடித்தவர்.

‘தெய்வம் தந்த வீடு’ திரைப்படத்தில் நாதஸ்வரக்கலைஞராக நாயகனாக நடித்திருந்தார்.

பிரான்ஸ், நெதர்லாந்து, ஜேர்மனி, கனடா, இங்கிலாந்து, இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் படப்பிடிப்பு நடத்தி அங்கெல்லாம் வாழும் தமிழ்க் கலைஞர்கள் பங்குபற்றும் பிரமாண்டமான தொலைக்காட்சித் தொடர் ஒன்று தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தவர்.

தான் சந்தித்த கலைஞர்கள் என நூல் ஒன்றினை கலைஞர் பரா அவர்களின் உதவியுடன் அவரது இறுதிக் காலத்தில் எழுதிக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments