மஹிந்தவுக்கு அழுத்தம் கொடுக்காதீர்- சிவமோகன் சீற்றம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மீது அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகிக்கக்கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.

இன்று அவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,

வெளிவரும் ஊடக செய்திகளின் அடிப்படையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கடுமையான அரசியல் அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளதை மக்களால் விளங்கிக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

வரப்போகும் அனர்த்தங்களை புரிந்து கொண்டு அரசியல் யாப்புக் குழப்பங்கள் ஏற்படாத வகையில் உயர் நீதிமன்றத்தின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுமாறு அரசுக்கு எழுத்து மூலமான கோரிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் விடுத்திருந்தார்.

அதற்கு ஜனாதிபதியின் சார்பாக பதிலளித்த செயலாளர், அரசியல் யாப்பு வியாக்கியானங்களை தெரிவித்து தேர்தலை நடத்துவதற்கு உரிய வகையில் எழுத்து மூலமான பதிலை வழங்கியிருந்தார்.

தற்போதைய அபாய சூழலை புரிந்து கொள்ளாத அரசின் அமைச்சர் உட்பட பலர் தேர்தலை நடத்த முடியும் அதற்கான பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடமே உள்ளது என அழுத்தங்களை பிரயோகித்து இருந்தனர்.

நாட்டில் கொரோனா நீங்கி விட்டதை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கான ஜனாதிபதி செயலணி நாட்டு மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். அதுவே ஒட்டுமொத்த கொரோனா அழிப்பு செயலணியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஜனாதிபதிக்கு பொருத்தமான செயற்பாடாக அமையும்.

எனவே தற்போதுள்ள சூழல் மிகவும் பயங்கரமான நிலமை என்பதை அரசு அறிந்து கொண்டு உலக நாடுகளில் ஏற்பட்ட கொரோனா அனர்த்தங்களை விளங்கிக் கொண்டும் செயற்பட வேண்டும். இலங்கையில் கொரோனாவின் கோர தாண்டவத்திற்கு எமது மக்களை பலி கொடுக்க மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் அனுமதிக்க முடியாது. - என்றுள்ளது.

No comments