யாழுக்கு தப்பி வந்தோருக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு!

கொரோனா அபாயம் உள்ள கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரையும் அவர்களை சட்டத்துக்கு புறம்பாக ஏற்றிவந்த லொறி சாரதியையும் விடத்தற்பளை படைமுகாம் தனிமை மையத்தில் வைத்து கண்காணிக்க நீதிமன்றம் இன்று (23) சற்றுமுன் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு -12 பகுதியிலிருந்து 8 பேர் சுகாதார அமைச்சின் அறிவுறுத்தல்களை மீறி பாஸ் அனுமதி பெற்ற அத்தியாவசிய சேவை லொறியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பி வந்தனர். அவர்கள் 8 பேரும் அடையாளம் காணப்பட்டதுடன், அவர்களை ஏற்றி வந்த சாரதியும் கண்டறியப்பட்டார்.

இந்நிலையில் சாரதி உட்பட 9 பேரையும் விடத்தற்பளையில் உள்ள படை முகாமில் தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

அதனை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல், 9 பேரையும் மே மாதம் 26ம் திகதிவரை தனிமைப்படுத்த உத்தரவிட்டார்.

கொரோனா அபாயமுள்ள கொழும்பு மாவட்டத்தில் இருந்து பாரவூர்தியில் யாழ்ப்பாணத்துக்கு தப்பிவந்த 8 பேரும் சாரதியும்  நேற்று இரவு இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

இதன்படி குருநகர் பீச் வீதியைச் சேர்ந்த ஒருவர், ஒஸ்மானியா வீதியைச் சேர்ந்த ஒருவர், சங்கானை, ஓடக்கரையைச் சேர்ந்த ஒருவர், சுழிபுரம் - தொல்புரத்தைச் சேர்ந்த ஒருவர், தெல்லிப்பழையை சேர்ந்த ஒருவர், நாவற்குழி வீட்டுத்திட்டம் பகுதியைச் சேர்ந்த மூவர் மற்றும் புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சாரதி ஆகிய ஒன்பது பேரே இவ்வாறு தனிமைப்படுதலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

No comments