செந்தூரன் மரணம் நிகழ்ந்தது எப்படி?

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் இ.செந்தூரன், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என்றும் அவரது
உடலில் அடிகாயங்கள் எவையும் இல்லை எனவும் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் செந்தூரன், நேற்று (24) மாலை முதல் காணாமற்போன நிலையில் தொண்டமனாறு கடலில் இன்று (25) அதிகாலை அவரது சடலம் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் பருத்தித்துறை நீதிவானின் உத்தரவில் அவரது சடலம் மந்திகை வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் இன்று முற்பகல் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன்போது "சடலத்தின் கழுத்து உட்பட உடலில் எந்தவொரு அடிகாயமும் இல்லை. கடல் விலங்குகளால் சடலத்தில் காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முகத்தில் உரசல் காயம் காணப்படுகிறது.

நுரையீரல் பெரியளவில் வீக்கம் அடைந்துள்ளது. அதனால் அவரது இறப்பு நீரில் மூழ்கி இடம்பெற்றுள்ளது" என்று சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments