பட்டினி சாவு தவிர்க்கமுடியாதது:மணிவண்ணன்



யாழ்.மாவட்டத்தில் தொடர்ந்து 10 நாட்களாக ஊடரங்கு சட்டம் அமுலில் உள்ளதால் நாளாந்த வருமானத்தை நம்பியுள்ள குடும்பங்கள் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழ்
தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கின்றது. இடையில் 8 மணித்தியாலங்கள் மட்டுமே ஊரடங்கு தவிர்க்கப்பட்டது. இதனால் அன்றாட வருமானத்திலும், சேமிப்பு இல்லாமலும் வாழ்க்கையை நடத்தி வந்தவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில் தாமாக முன்வந்து தமது உடல் நலனை பணையம் வைத்து தன்னார்வமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை கொண்டு சென்று சேர்ப்பவர்களுக்கு தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விதிப்பது என்பது, இங்கு ஒரு பட்டினி சாவு ஏற்படும் அவல நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும்.
இவ்வாறு உதவிப் பொருட்களை விநியோகம் செய்த எமது கட்சியின் உறுப்பினர்கள் கொடிகாமம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய சம்பவமாகும்.
கைது செய்யப்பட்டவர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஊடரங்கு வேளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகளை கொண்டு சென்று சேர்ப்பதற்கான அனுமதியினை உரிய முறையில் பெற்றிருந்தனர்.
இருப்பினும் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் உதவிப் பொருட்கள் வழங்கப்படாத நிலையிலேயே எங்களால் அவர்களுக்கான உதவிப் பொருட்கள் வழங்கப்படுகின்றது.
இதனையும் அரச படைகள் தடுப்பது என்பது மனிதத்துவத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.
தற்போது நாட்டில் எழுந்துள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தன்னார்வ தொண்டு அமைப்புக்களின் சமூக பணிகளை ஒரு பாதுகாப்பு பொறிமுறைக்குள் ஒழுங்குபடுத்தப்பட்டு செறிப்படுத்தப்படலாம்.
ஆனால் அந்த சமூகப் பணிகள் நிறுத்தப்படக்கூடாது. அவ்வாறான நிறுத்தப்படுமாகா இருந்தால் கொரோனா வைரஸ் தாக்கத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்பதை தாண்ட பட்டினி சாவு ஏற்படும்.
இதனைத அரசாங்கமும், அதன் படைகளும் புரிந்து கொள்ள வேண்டும். எமது கட்சி சார்ந்தே யாழ்.குடா நாடு முழுவதும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியாலேயே அதிகளவிலான உதவிகள் வழங்கப்பட்டுகின்றன.
இதை பொறுத்துக் கொள்ளாதவர்களும், மக்களுக்கு உதவிகள் கிடைக்கக்கூடாது என்று எண்ணுபவர்களே உதவிகள் செய்பவர்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றார்கள் என்றார்.

No comments