செல்வத்தின் தூக்கம் கலைந்தது?


தமிழ் பிரதேசங்களில் யுத்த காலத்தில் எப்படி மக்கள் அச்சத்துடன் வாழ்ந்தார்களோ அப்படியான ஒரு சூழ்நிலை தற்போது படிப்படியாக ஏற்பட்டு வருகிறது என ரெலோ கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தற்போது தமிழ் பிரதேசங்களில் இராணுவத்தின் சோதனைச் சாவடிகள் அதிகம் காணப்படுகின்றன. மக்களை ஏற்றி இறக்குகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. வயோதிபர்கள், பெண்கள், கர்ப்பிணித் தாய்மார் என்று பார்க்காது வெயிலில் இறக்கி நடந்து செல்ல வைக்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.

சோதனை என்கின்ற வகையில் மக்களை துன்பத்திற்கு உள்ளாக்குகின்றனர். வடக்கு, கிழக்கில் மாத்திரமே இந்த சோதனைச் சாவடிகள் அமைந்துள்ளமை அனைவரும் அறிந்ததே. அதற்கான கண்டனத்தை நாங்கள் தெரிவித்துள்ளோம்.

தற்போது கிராமம் கிராமமாக சுற்றி வளைப்பு சோதனைகளை இராணுவத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.

போர்க் காலங்களில் எங்களுடைய மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் இடை மறிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட காலங்கள் உள்ளன. குறித்த நடவடிக்கைகள் தற்போதும் இடம்பெற்று வருகின்றன.

சிங்கள மக்கள் வாக்களித்தார்கள் என்ற ரீதியில் 3இல் 2 பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில் ஜனாதிபதியும் பிரதமரும் தமிழ் மக்கள் மீது அடக்கு முறையை மேற்கொள்ளுவது ஏற்புடையதாக இருக்காது.

சிங்கள மக்களை பொறுத்தவகையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமது வாக்குகளை ஒன்றாக போட்டார்கள். இம் முறை நாடாளுமன்ற தேர்தலில் அவர்கள் நிச்சயமாக தற்போது உள்ளவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

இனவாதத்தை தூண்டுகின்ற வகையிலே வடக்கு கிழக்கில் எங்களுடைய மக்களை துன்பப்படுத்துவதினூடாக சிங்கள மக்களினுடைய வாக்குகளை கூடுதலாக பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற திட்டம் இருக்கின்றதெனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

No comments