கப்டன் பண்டிதர் குடும்பத்தை தெருவுக்கு விட்ட நீதிமன்றம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியான "கப்டன்" பண்டிதரின் தாயார் சின்னத்துரை மகேஸ்வரி மற்றும் சகோதரன் ஆகியோர் தாம் குடியிருந்த வீட்டிலிருந்து நீதிமன்ற உத்தரவையடுத்து நேற்றைய (05) தினம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புலிகளின் முன்னாள் நிதி மற்றும் ஆயுதப் பராமரிப்பு பொறுப்பாளருமான கப்டன் பண்டிதர் 1985ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையின்போது வீரச்சாவடைந்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பண்டிதரின் தாயாரும் இரண்டு சகோதரர்களும் யாழ்ப்பாணம் - கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில் இவர்களில் ஒரு சகோதரன் 2006ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

அதன்பின்னரும் கம்பர்மலையில் வசித்து வந்த நிலையில், அவர்கள் தங்கியுள்ள வீடு தமக்கு உரியது என பிறிதொரு குடும்பம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. புலிகள் துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டு பத்திரத்தை பண்டிதரின் பெயருக்கு மாற்றியதாகவும் அவர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்நிலையில் நீண்ட காலமாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் பிரகாரம் குறித்த வீடு உரிமை கோரிய குடும்பத்திற்கு சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் மற்றும் உரிமை கோரிய தரப்பினர் அந்த வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை அனைத்தையும் வெளியில் கொண்டு வந்து போட்டதுடன் குடும்பத்தையும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில் சம்பவத்தை அறிந்து நேற்றிரவு பண்டிதரின் குடும்பத்தை சந்தித்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட குழு "குறித்த குடும்பத்தினருக்கு சொந்தமான காணியில் தற்காலிக வீடு அமைத்து பின்னர் நிரந்தர வீடு அமைத்துக் கொடுக்க ஏற்பாடு செய்வதாக" உறுதியளித்தனர்.

No comments