14 நாள் தடுப்பு:முடியாவிடின் வெளியேற பணிப்பு?


கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகள் உள்ளிட்ட இலங்கையைச் சேர்ந்த அனைவரும், புனாணை, கந்தகாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாமில், 14 நாள்கள் தங்கியிருந்த பின்னரே, நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுவர் என, இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர், இன்று (11) கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, கொழும்பிலுள்ள பாதுகாப்பு அமைச்சின் ஊடக மய்யத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கைக்கு வரும் இலங்கையைச் சேர்ந்த ​வெளிநாட்டவர்களை பாதுகாக்க வேண்டியதும் நாட்டிவுள்ள 22 மில்லியன் மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பும், நாட்டிவுள்ள முப்படையினருக்கும் பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கும் உண்டு என்றும் எனவே, ​​வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளும் மிகவும் பொறுப்புடனும் அவதானத்துடனும் நடந்துகொள்ளவேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா வைரஸால் அதிகளவு பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள், இலங்கையைச் சேர்ந்த வெளிநாட்டவர்கள் அனைவரும், புனாணை, கந்தகாடு தடுப்பு முகாமில் 14 நாள்களுக்கு தங்கியிருக்க விரும்பவில்லை என்றால், மீண்டும் அந்தந்த நாடுகளுக்கே திரும்பி சென்றுவிடலாம் என்றும் இல்லையெனில், சட்டபூர்வமாக தாங்களது சுகாதார நிலைமையை நிரூபித்துவிட்டு, நாட்டுக்குள் உள்நுழைய முடியும் என்றும் அவர் கூறினார்.
நாட்டிவுள்ள அனைத்து மக்களையும் பாதுகாப்பும் பொருட்டு, சுகாதார அமைச்சின் உதவியுடன், அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் எனவே, பொதுமக்கள், எந்தவொரு விதத்திலும் அச்சமடையத் தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
அவ்வாறே, கொரோனாவில் பாதிக்கப்பட்ட நபரொருவர் விமான நிலையத்துக்கு வருவார் என்றால், அவரின் மூலம் மற்றைவர்களுக்கு இந்த வைரஸ் பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் ​வெளிநாட்டில் இருந்து வருகை தந்த 172 பேர், நேற்று வரை குறித்த தடுப்பு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

No comments