கிளிநொச்சி நகரிற்கு வரவேண்டாம்:மாவட்ட செயலர்?


ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக சந்தைகள் மற்றும் வியாபார நிலையங்களுக்கு முன் அதிகளவில் ஒன்று கூடுவதனை தவிர்ப்பதற்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கிளிநொச்சி மாவட்ட செயலர் றூபவதி கேதீஸ்வரன்.

கண்ணுக்கு தெரியாத வைரசுடன் நடக்கும் யுத்தத்தை வெற்றிக்கொள்ள பொது மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்கு வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இன்று புதன்கிழமை காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் காலை பதினொறு மணிக்கு; இடம்பெற்ற கூட்டத்தின் பின் ஊடகவியலாளர்களுக்கு அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக அதிகளவில் ஒன்று கூடுகின்றனர் இது கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு அரசினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகள் அனைத்தையும் சில மணிநேரங்களுக்குள் கேள்விக்குள்ளாக்கி விடுகிறது. எனவேதான் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுகின்ற போது பொது மக்கள் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்குரிய விசேட ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

ஒவ்வொரு கிராமங்களிலும் கிராம அலுவலர் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற வியாபார நிலையங்களை குறிப்பிட்ட நேரங்களில் திறந்து பொது மக்களுக்கான பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.அத்துடன் தொலைபேசி அழைப்பின் ஊடாக வீடுகளுக்கான பொருட்களை குறித்த வியாபார நிலையங்கள் மூலம் விநியோகிப்பதற்கும், இந்த வியாபார நிலையங்களுக்கான பொருட்களை மாவட்டத்தில் உள்ள மொத்த வியாபாரிகள் மூலம் கிராமங்களுக்கு சென்று வழங்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

விவசாயிகளிடம் இருந்து மரக்கறிகள் அந்தந்த கிராமங்களில் தெரிவு செய்யப்படுகின்ற இடங்களில் விற்பனை செய்வதோடு கூட்டுறவு அமைப்புகளின் ஊடாக விற்பனை செய்யவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். 

பொது மக்கள் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்படுகின்ற நேரங்களில் நகரில் ஒன்று கூடுவதனை தவிர்க்குமாறும், ஒத்துழைப்பு தருமாறும் கிளிநொச்சி மாவட்ட செயலர் பொது மக்களிடம் கோரியுள்ளார்.

No comments