கூட்டமைப்பின் பேரம் பேசல் பூச்சாண்டி!


தமிழ்தேசிய கூட்டமைப்பு பேரம் பேசுவதற்கு கிடைத்த சகல
சந்தர்ப்பங்களையும் தவறவிட்ட நிலையில், இப்போது பேரம் பேசுவதற்கு 20 ஆசனங்களை தாருங்கள் என கேட்பது வெறுமனே கதிரைகளை பிடிப்பதற்கான முயற்சி மட்டுமே. அதன் ஊடாக பேரம் பேசல் நடக்கப்போவதில்லை என்பதே உண்மையாகுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தொரிவித்துள்ளார். 

யாழ்.ஊடக அமையத்தில் இன்;று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேரம் பேசுவதற்காக 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்கள் கொடுக்க வேண்டுமெனக்கூறியிருக்கின்றார்.ஆனால் கடந்த 10 வருடங்களாக பேரம் பேச தவறியது எதற்காக? என்ற கேள்விக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு இன்றளவும் விளக்கமளிக்கவில்லை. இப்போது பேரம் பேசும் சக்தியை கொடுங்கள் என கேட்கிறார்கள். போருக்கு பின்னரான 10 வருடங்களில் தமிழ் மக்கள் பெரும் ஒத்துழைப்பை வழங்கினார்கள். ஏதிர்கட்சி அந்தஸ்த்தும் கூட தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கு கிடைத்திருக்கின்றது.அப்போதும் பயன்படுத்தவில்லை. 

வரவுசெலவு திட்டத்தின்போதும், ஆட்சி கவிழ்ப்பின்போதும் கூட பேரம் பேசுவதற்கான மிக சிறந்த சந்தர்ப்பம் கிடைத்திருந்தது. ஆனாலும் அதனை பயன்படுத்தவில்லை. ஆகவே பேரம் பேசுவதற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்த தவறியது எதற்காக? என்பதை கூட்டமைப்பு கூறவேண்டும்.மேலும் கிடைத்த சந்தர்ப்பங்களை தவறவிட்டு இப்போது பேரம்பேச சந்தர்ப்பம் கேட்பது கதிரையை நிரப்பும் வேலை மட்டுமேயாகும். அதனால் பேரம் பேசல் நடக்காது என்பதே உண்மை எனவும் சுரேஸ்பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

No comments