பெண் மீது சராமரியாக வாள் வெட்டு?

மட்டக்களப்பு – ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் உள்ள நெடியமடு எனும் கிராமத்தில், தூக்கத்திலிருந்த குடும்பப் பெண்  மீது  வாள் வெட்டுத்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில், அப்பெண் படுகாயமடைந்த நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாரெனப் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு (03)  இடம்பெற்ற இச்சம்பவத்தில் நெடியமடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே பாதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணின் கணவர், மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் நிமித்தம் வேலை வாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளதால், தனது பிள்ளைகளுடன் உறவினர்களின் பாதுகாப்பில் இவர் வசித்து வந்துள்ளாரென, ஆரம்பக் கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு தாயும் மூன்று பிள்ளைகளும் தூக்கத்தில் இருந்தவேளையில், வீட்டின்  கூரைவழியாக ஓடுகளைக் கழட்டிக்கொண்டு வீட்டினுள் இறங்கிய மர்ம நபர், உறக்கத்திலிருந்த பெண்ணைக் கூரிய கத்தியால் தலையிலும் கையிலும் வெட்டி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

No comments