கொள்ளையர் ஆட்சிகளால் வறுமைக்குள் இலங்கை?

இலங்கையின் வறுமை நிலைக்கு 72 வருடங்களாக மாறிமாறி ஆட்சியாளர்கள் என்ற பெயரில் இருந்த கொள்ளையர்களே காரணம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) யாழ். மாவட்ட அமைப்பாளர் இரா.சந்திரசேகரன் தெரிவித்தார்.

வவுனியாவில் தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்டத்திற்கான மாநாடு இன்று (23) இடம்பெற்ற போது அவர் இதனை தெரிவித்தார். மேலும்,

இலங்கையில் உள்ள எல்லாப் பிரதேச மக்களும் ஆட்சியாளர்களால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். ஆட்சியாளர்கள் தாம் ஆட்சியைக் கைப்பற்றிக் கொள்வதற்கும் தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் மக்களை பகடைக்காய்களாகப் பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு, அவர்கள் ஆட்சிப் பீடமேறி கொள்ளையடித்தது மாத்திரமின்றி நாட்டில் இலஞ்சம் ஊழலை கொடிகட்டிப் பறக்கவிட்டார்களே தவிர வேறு எதனையும் செய்யவில்லை. அண்மையில் பிரதமர், இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்து கடன் தொடர்பாக கதைத்த விடயங்களைப் பார்க்கின்ற போது எமது நாடு எதியோப்பியாவை விட கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நாடாகக் காணப்படுகின்றது.

எமது நாடு ஒரு காலத்தில் செல்வ நாடாக அனைத்து வளங்களும் உள்ள நாடாக இருந்தது. தற்போதும் அனைத்து இனத்தவரையும் ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்து அனைத்து வளங்களையும் பாதுகாத்தோமேயானால் எமது நாட்டை செல்வந்த நாடாக மாற்ற முடியும்.

இதேவேளை, வறுமை கூடிய மாகாணமாக வட மாகாணமே காணப்படுகின்றது. அந்தவகையில் வறுமையால் வாடுகின்ற மக்கள் தமிழ் மக்களேயாகும். தொழிலின்றி இருப்பவர்களில் 10 வீதமானவர்கள் வட மாகாணத்தைச் சேந்தவர்களாக இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் எந்த விதமான அபிவிருத்திகளையும் செய்யாமல் தேர்தல் காலத்தில் மாத்திரம் யானையை தருகின்றேன், பூனையை தருகின்றேன் என போலி வாக்குறுதிகளை வழங்குகின்றார்களே தவிர இதில் இருந்து மாற்று வழிகளை யாரும் பெற்றுத்தரவில்லை.

எனவே வன்னி மக்கள் விழித்தெழ வேண்டும். நாளையில் இருந்து உங்கள் செயற்பாட்டை முன்னெடுங்கள். அது இன, மத வேறுபாடின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் - என்றார்.

No comments