சவேந்திர தடையை கூட்டமைப்பு எதிர்ப்பதா - சிங்களம் கொதிக்கிறது

சஜித் பிரேமதாச கொண்டுள்ள நாட்டுப்பற்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்கா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டமை தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்,

பிரிவினைவாதத்தை தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் குறியாக இருக்கின்றனர். இராணுவத் தளபதிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் அமெரிக்க அரசாங்கம் விதித்துள்ள தடையை, தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வரவேற்று ஆதரித்திருப்பது மிகுந்த கவலையளிக்கின்றது.

இதேவேளை இராணுவத் தளபதிக்கு பக்கச்சார்பான அமெரிக்க அரசாங்கத்தின் தீர்மானத்தை சஜித் பிரேமதாச கண்டித்துள்ளதை நாம் வரவேற்கின்றோம். எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இவ்விடயத்தில் எதிர்க்கட்சித் தலைவரை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டும்.

அதாவது சஜித் பிரேமதாசவிடம் காணப்படுகின்ற நாட்டுப்பற்றை கூட்டமைப்பினரும் கற்றுக்கொள்ள வேண்டும் - என்றார்.

No comments