கசிப்புக்கு எதிராக தனி ஆளாக போராடும் பெண்!

கிளிநொச்சியில் அதிகரித்துள்ள கசிப்பை ஒழிக்காதுவிடின் தான் குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக முப்பது வயது பெண் ஒருவர் 9 மாதக் குழந்தையுடன் வீதியில் தனிநபராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிளிநொச்சி கோணாவில் கிராம அலுவலர் பிரிவில் உள்ள காந்திக்கிராமத்தில் கசிப்பு பாவனை அதிகரித்துள்ளது எனவும் இதனால் தன்னைப் போன்ற பெண்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான பாதுகாப்பான சூழல் காணப்படவில்லை, கசிப்பு பாவனையாளர்களால் அச்சமான நிலைமையே ஏற்பட்டுள்ளது, குடும்பத்தில் நிம்மதியில்லை, பாடசாலை பிள்ளைகள் நிம்மதியாக படிக்க முடியாதுள்ளது, குறிப்பாக பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது, வீடுகளின் வாசல்கள் வரை கசிப்பு விற்பனை வந்துவிட்டது, எப்பொழுதும் மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்கள் இப்படி சொல்ல முயாத அளவுக்கு கசிப்பு பாவனையால் அவலம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இனியும் பொறுத்துக்கொள்ள முடியாத நிலையிலேயே, தான் தனது குழந்தையுடன் இம்முடிவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

இனியும் தன்னால் இந்த அவலத்தை அனுபவித்துக்கொண்டு வாழ முடியாது எனவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.

தமது கிராமத்தின் கசிப்பு விடயம் தொடர்பாக கிராம அலுவலர் மற்றும் பொலிஸாருக்கு அறிவித்தும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments