யாழ்.மாநகரசபைக்கு எதிராக மக்கள் வீதியில்?

யாழ்.மாநகரசபையின் முதல்வரின் நடவடிக்கையைக் கண்டித்தும் குத்தகைகாரர்களின் செயற்பாடுகளைக் கண்டித்தும் யாழ்.கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் கதவடைப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
புதிதாக திறக்கப்பட்ட கல்வியங்காடு பொதுச் சந்தையை பொறுப்பேற்ற குத்தகையாளர்கள் சந்தையை சுகாதார ரீதியாக ஒழுங்காக சுத்தம் செய்வதில்லை,வரி அறவீட்டை இரண்டு மடங்காக மேற்கொள்கின்றமை, போன்ற செயற்பாடுகளைக் கண்டித்தும்,மீன் சந்தைக்கான பாதையை பெரிதாக மாற்றித் தருவதாகவும் இன்னும் சில விடயங்களுக்கு வழங்கிய வாக்குறுதியை யாழ்.மாநகர சபை முதல்வர் நிறைவேற்றவில்லை என்றும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கல்வியங்காடு பொதுச்சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக புதிதாக சந்தைக் கட்டடம் அமைக்கப்பட்ட நிலையில் வியாபாரிகள் வெற்றுக்காணி ஒன்றில் தற்காலிகமாக வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர். கடந்த மாதம் தமிழரசுக்கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருந்த நிலையில் அதே நாள் வடக்கு மாகாணசபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்.மாநகர முதல்வர் ஆர்னோல்ட், ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோர் சம்பிரதாய பூர்வமாக திறந்து வைத்திருந்தனர்.
இருப்பினம் இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்தே சந்தை நடவடிக்கைகள் தொடங்கியிருந்தன.ஒருவார காலத்திலேயே குத்தகை தாரர்கள் இவ்வாறு நடந்து கொள்வதால் வியாபாரிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

No comments