மணல் அகழ்வு; நால்வருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

யாழ்ப்பாணம்  – அரியாலை பூம்புகார் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட நால்வருக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் தண்டப் பணம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
“உரிய அனுமதிப்பத்திரம் பெறப்படாமல் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவதால் சுற்றுச்சூழலுக்கு பெருமளவில் பாதிப்பு ஏற்படுகிறது. அதனை அனுமதிக்க முடியாது” என்று நீதிவான் ஏ.பீற்றர் போல் சுட்டிக்காட்டினார்.
அரியாலை பூம்புகார் கடற்கரை பகுதியில் நேற்றிரவு பெக்கோ வாகனத்தின் மூலம் மணல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மணல் அகழ்வுக்கான சுரங்க அகழ்வு பணியகத்தின் இருக்கவில்லை. அதனால் அவர்கள் ஐந்து பேரும் விசாரணைகளின் பின்னர் இன்று (திங்கட்கிழமை) மாலை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.
ஐந்து பேருக்கும் எதிராக தனித்தனியே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. முதலாவது எதிரி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்கமறுத்து சுற்றவாளி என்று மன்றுரைத்தார். அதனால் அவரை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
ஏனைய நால்வரும் தம் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டு குற்றவாளி என மன்றுரைத்தனர். அதனால் நால்வரும் தலா ஒரு இலட்சம் ரூபாய் தண்டப்பணம் விதித்து விடுவிக்கப்பட்டனர்.

No comments