கோப்பாயில் விபச்சார விடுதியா? அரசியல் தலையீட்டால் நடவடிக்கை

கோப்பாய் வடக்கில் விபச்சார விடுதி என ஊர் மக்களால் தெரிவிக்கப்பட்ட வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பம் அரசியல் பிரதிநிதிகளின் தலையீட்டால் நேற்று (07) வெளியேற்றப்பட்டனர்.

அத்துடன், அங்கு விபச்சாரத்தில் இருந்தனர் என்ற குற்றச்சாட்டில் பொது மக்களால் பிடிக்கப்பட்ட இருவர் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

சம்பவம் இடம்பெற்ற குறித்த வீடொன்றில் கணவனும் மனைவியும் வாடகைக்கு குடியிருந்தனர். அவர்களுடைய வீட்டுக்கு தினமும் ஆண், பெண் எனப் புதுப்புது முகங்கள் வருகைதந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதனால் சந்தேகம் கொண்ட ஊரவர்கள் அந்த வீட்டில் உள்ளவர்கள் தொடர்பில் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் நேற்று ஊரவர்கள் ஒன்றுகூடி வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளனர். அங்கு இருந்த இரண்டு ஆண்கள் மட்டும் பொது மக்களால் பிடிக்கப்பட்டனர். எனினும் பெண்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் ஈபிடிபி பிரதேச சபை உறுப்பினர் இராநாதன் ஐங்கரன் ஆகியோருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற இருவரும் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவித்தனர்.

எனினும் கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுக்க பின்னடித்த நிலையில் பிரதேச சபை உறுப்பினர் இ.ஐங்கரன், அமைச்சர் டக்ளஸுக்கும் வலி கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தி.நிரோஷ் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கும் தகவல் வழங்கினர்.

அமைச்சர் டக்ளஸ் மற்றும் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய சம்பவ இடத்துக்குச் சென்ற கோப்பாய் பொலிஸார், அந்த வீட்டில் வாடகைக்கு குடியமர்ந்திருந்தோரை அங்கிருந்து வெளியேறுமாறு பணித்ததுடன், பொது மக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட சுழிபுரம், சங்கானையைச் சேர்ந்த இருவரை பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

No comments