வடக்கில் மணல் அகழ்வை தடுக்க கோருகிறார் டக்கி

மணல் ஏற்றிச் செல்வதற்கான வீதி அனுமதிப் பத்திரங்களை இரத்து செய்யும் அமைச்சரவையின் தற்காலிக தீர்மானத்தை துஷ்பிரயோகம் செய்து மக்களின் இயல்பு வாழ்கைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவோரின் செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவிற்கு எழுதிய அவசர கடிதத்திலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை கோரியுள்ளார்.

மேலும்,

வட பகுதியில் அனுமதி அளிக்கப்படாத இடங்களில் மணல் அகழப்படுவதை உடனடியாக நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

வடக்கு மாகாணத்தில் பரவலாக மணல் திட்டுக்கள் காணப்படுவதால் வீதி அனுமதி இரத்தானது பல்வேறு தரப்பினரையும் அனுமதி அளிக்கப்படாத இடங்களில் எல்லாம் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தியிருக்கின்றது.

சட்ட ரீதியாக அனுமதிக்கப்படாத இடங்களில் மணல் அகழ்வில் ஈடுபடுவதினால் சுற்றாடல் பாதுகாப்பிற்கு ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும். - என்றார்.

இதேவேளை கடந்த ஆட்சியின்போது துஷ்பிரயோகங்கள் தொடர்பாக காத்திரமான நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளாது இருந்த தரப்புக்கள் தற்போதைய அரசாங்கம் மக்கள் நலன்சார்ந்து மேற்கொண்ட தீர்மானங்களுக்கு எதிராக மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்து வருகின்றனர் என்றும் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

No comments