தொண்டமானின் கட்சி காணாமல் போகும்; வேலு

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது என்ற தீர்மானத்தை ஆறுமுகன் தொண்டமான் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் இல்லையேல், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணாமல் போய்விடும் என கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு திரட்டி கண்டி மாவட்டத்தில் பல இடங்களிலும் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்துவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இம்முறை பட்டப்பகலிலேயே படு குழிக்குள் விழும் வகையில் அரசியல் தீர்மானம் எடுத்துள்ளது. இதே வழியில் ஆறுமுகன் தொண்டமான் பயணிப்பாராயின் இன்னும் சில வருடங்களில் காங்கிரஸ் காணாமல்போய்விடும்.
தமிழ் மக்களால் துரோகிகளாக பார்க்கப்படுகின்ற கருணா, பிள்ளையான் போன்றோர் அங்கம் வகிக்கும் அணியில் ஆறுமுகன் தொண்டமானும் இணைந்துள்ளதால் அவரின் கட்சி சகாக்களே கடும் அதிருப்தியில் உள்ளனர். எனவே, ஜனாதிபதி தேர்தல் குறித்து தான் எடுத்துள்ள முடிவை – சமூகத்தின் நலன்கருதி அவர் மீள்பரிசீலனை செய்யவேண்டும்.
மகாத்மா காந்தி, நேரு போன்ற பாரத தேசத்தின் தலைவர்களின் பங்களிப்புடனேயே மலையக மக்களுக்காக 1939 ஆம் ஆண்டில் இலங்கை, இந்திய காங்கிரஸ் உதயமானது.
எனவே, எங்கள் தாத்தா அதை செய்தார், இதை செய்தார் என கூறிக்கொண்டு, மக்கள் கோரிக்கையை புறந்தள்ளி, இனியும் சந்தர்ப்பாத அரசியலை ஆறுமுகன் தொண்டமான் முன்னெடுப்பாரானால், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிச்சயம் காணாமல்போய்விடும்.
சிறப்பான தலைமைத்துவம் இன்மையால் சுதந்திரக்கட்சிக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலைமையை சிறந்த படிப்பினையாக அக்கட்சிக்காரர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்
தமிழ் இன துரோகிகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைந்துள்ளார். வழமையாக தவறான அரசியல் முடிவுகளால் இரவில் வெட்டப்படும் குழிக்குள் விழும் ஆறுமுகன் தொண்டமான், இம்முறை பட்டப்பகலிலேயே குழிக்குள் விழுந்துள்ளார். அந்த குழிக்குள் இருந்து மீள வேண்டுமானால் தான் எடுத்துள்ள முடிவை மீள்பரிசீலனை செய்ய வேண்டும்” என கூறினார்.

No comments