சிங்கள வாக்கில் மட்டும் வெல்வதை கோத்தா விரும்பவில்லை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெறுமனே சிங்கள மக்களின் வாக்குகளால் மாத்திரம் வெற்றி பெறுவதை விரும்பவில்லை என இணைந்த வடக்கு கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
தனது வெற்றியில் தமிழ், முஸ்லிம் மக்களின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்றே கோட்டாபய ராஜபக்ஷ எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராஜகிரியவிலுள்ள சுதந்திரக் கட்சி – பொதுஜன பெரமுன முன்னணியின் இணைந்த அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு மக்கள் ஏற்கனவே தீர்மானித்து விட்டார்கள். தெற்கு வாழ் மக்களில் 75 வீதமானவர்கள் கோட்டாபயவுக்கு நிச்சயம் வாக்களிப்பார்கள்.
அதேபோன்று தமிழ் மக்களும் சிறந்த தீர்மானத்தை எடுப்பதற்கு நாம் அவர்களை சரியான முறையில் வழிநடத்த வேண்டும். எனவேதான் தமிழ் சமூக ஜனநாயக கட்சி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்தது.
அத்தோடு சுய நிர்ணயம், சமஷ்டி உள்ளிட்ட எந்த விடயங்களிலும் கூட்டமைப்புக்கு அக்கறை கிடையாது. இலஞ்சம் கொடுத்து ஐக்கிய தேசியக் கட்சி தமிழ் கூட்டமைப்பை வாங்கியிருக்கிறது.
எனவே சஜித் ஆட்சிக்கு வந்தால் மக்கள் நிம்மதியாக இருக்க முடியாது. காரணம் அவருடைய தந்தை ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் காணப்பட்ட அட்டூழியங்களே இவர் ஆட்சிக்கு வந்தால் தொடரும்” என அவர் கூறியுள்ளார்.

No comments