தோற்கிறது கூட்டமைப்பின் வலி.வடக்கு பிரதேசசபை!


காங்கேசன்துறையில் பாரிய குப்பைகொட்டும் களத்தை திறக்கும் கூட்டமைப்பு சார்பு வலி.வடக்கு பிரதேசசபையினது முயற்சி தடுக்கப்பட்டுள்ளது.

வலி.வடக்கு பிரதேச சபையில் கடந்த அமர்பில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி வாக்கெடுப்பிற்கு விடாமலே நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்கள் இன்றைய சபை அமர்வில் பெரும்பான்மை உறுப்பினர்களால் நிராகரிக்கப்பட்டது.

வலி.வடக்கு பிரதேச சபையின் நபவம்பர் மாதத்திற்கான பொது கூட்டம் இன்று சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் சபை அமர்வின் போது ஏற்பட்ட குழப்பமான நிலையால் சபை மண்டபத்திற்கு காவல்துறையினர் வரவழைக்கப்படடிருந்தனர். இதனால் சபை கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளியேறியிருந்த நிலையில், உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானங்களையும் புறக்கணிப்பதாக தெரிவித்தனர்.
அத்தீர்மானங்கள் சபையின் அனைத்து உறுப்பினர்களும் இல்லாத சமயம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டமை சட்டத்திற்கு புறம்பானது. எனவே அதனை நிராகரிப்பதாக தெரிவித்தனர்.

உறுப்பினர்களின் இக் குற்றச்சாட்டை அடுத்து, ஒக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 17 தீர்மானத்தையும், ஆதரிப்பதா? எதிர்ப்பதா? என்ற வாக்கெடுப்பு சபை உறுப்பினர்களிடையே நடத்தப்பட்டது.

இதன் போது குறித்த 17 தீர்மானங்களையும் தாங்கள் நிராகரிப்பதாக 18 உறுப்பினர்கள் வாக்களித்து அத்தீர்மானங்களை நிராகரிக்கச் செய்திருந்தனர்.
இருப்பினும் குறித்த 17 தீர்மானங்களையும் நிராகரிக்க கூடாது என்று சபையில் இருந்த கூட்டமைப்பு சார்பு 16 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments