இரகசிய முகாமும் இல்லை கைதிகளும் கிடையாது

நான் அமைச்சராக இருந்த போது அனைத்து சிறைச்சாலைகளையும் சென்று அவதானித்துள்ளேன். இரகசிய முகாம் அல்லது இரகசிய கைதிகள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை என முன்னாள் பிரதி அமைச்சர் கருணா எனும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று (18) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். மேலும்,

தமிழ்மக்களின் வாக்குகள் கோத்தாபாயவிற்கு குறைந்துள்ள நிலையில் எமக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புக்களை இழந்திருக்கிறோம் என்று தான் நினைக்கிறேன். எனினும் காலப்போக்கில் இதில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம். வடகிழக்கில் பல பிரச்சினைகள் இருக்கிறது. கூடுதலான வாக்கினை அழித்திருந்தால் உரிமைகளை கேட்டு பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் இருந்தது. ஆனால் தற்போது வடகிழக்கு வாக்குகள் தேவையில்லை என்ற அடிப்படையில் தான் அவர் வெற்றிபெற்றிருக்கிறார். இதை பற்றி நாம் கவலையடைய தேவையில்லை.

எமது தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட கட்சி தான் தமிழ் கூட்டமைப்பு. அதற்காக அவருடன் இருந்து நானும் பாடுபட்டேன். எமது அரசியல் பிரச்சினைகளை பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்காகவே அது உருவாக்கப்பட்டது. ஆனால் இன்று கூட்டமைப்பின் போக்கு மாறிவிட்டது. அவர்கள் தங்களின் நலனுக்காக மக்களை திசை திருப்பியிருக்கிறார்கள். நேரத்துக்கு நேரம் மக்களை ஏமாற்றும் சக்தியாக மாறி வருகிறார்கள். அதனாலே அவர்களிற்கு எதிராக பல கட்சிகள் உருவாகி இருக்கிறது. இந்த தேர்தலிலே மாற்றம் வரவேண்டும் என்று முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் கூட தெளிவாக கூறியிருந்தார்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அது ஒரு சிறு பிரச்சனை. இந்த 134 பேரும் சாதாராண போராளிகள். ஒரு இரு  பாரிய பிரச்சனையாக உலகளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை நாம் கோத்தாவிடம் தெரிவித்துள்ளோம். நாம் நிச்சயமாக விடுவிப்போம் என எமக்கு தெரிவித்துள்ளனர். எனவே அதில் உள்ள சட்ட சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டோர் இருக்கின்றார்களா என்பதை அரசு தலைவர் உத்தரவாதம் கொடுக்க வேண்டும். அதனையும் கோத்தாவிடம் நாம் எதிர்பாக்கிறோம். அல்லது காணாமல்  ஆக்கபட்டிருந்தால் குறிப்பிட்ட வருடத்திற்கு  பின்னர் அவர்களிற்கு மரண அத்தாட்சி கொடுத்திருக்கவேண்டும்.

எனது சகோதரனும் காணாமல் ஆக்கபட்டுள்ளார். அவர் மரணமடைந்து விட்டார் என்பது எனக்கு தெரியும். ஆனால் அவரது உடலை நாம் எடுக்கவில்லை. அதற்காக அவர் இருக்கிறார் என்பதை நாம் நம்பவில்லை. போரில் அனைத்து பக்கமும் பிழை நடந்துள்ளது. கொலை செய்யாதவர் எவரும் இல்லை. இதை போலவே விடுதலை புலிகளும். நாமும் போரில் நின்றிருந்தோம். நாம் அடைந்த வெற்றியினூடாக கொலைகள் இடம்பெற்றுள்ளது. ஒரு தாக்குதலில் இரண்டாயிரம் இராணுவம் கொல்லப்பட்டால் அதுகும் கொலைதான்.

போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொலைசெய்யப்பட்டார்கள். அவர்கள் போரில்  நெருங்கியே கொலை செய்யப்பட்டார்கள்.  திட்டமிட்டு கொலை செய்யப்படவில்லை. இதனை தமிழ் மக்கள் ஏற்றுகொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்தாமல் அவர்களை விடுவித்து விட்டு எமது போராளிகள் மடிந்திருப்பார்களாக இருந்தால். உலகம் வரவேற்றிருக்கும். - என்றார்.

No comments