தேர்தலை நடத்த சீ.வீ.கே. கோரிக்கை?


மாகாணசபை தேர்தல்களை விரைந்து நடத்த வடமாகாண அவை தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிடம் கோரியுள்ளார்.

அவர் கோத்தபாய ராஜபக்சவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கணிசமான எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காமை பற்றிய தங்களது ஏமாற்றத்தை தாங்கள் நேரடியாகவே வெளிப்படுத்தியமை வரவேற்கத்தக்கது. தமிழர்கள் ஆகிய நாம் இனவாதிகள் அல்ல என்பதை தங்களுக்கு வலியுறுத்த விரும்புகிறேன்.

உண்மையாகவே ஒன்றிரண்டு தமிழ் வேட்பாளர்கள் போட்டியிட்ட போதும் அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் ஒரு சிங்கள பௌத்த தலைவருக்கே நாம் எப்பொழுதும் வாக்களித்திருக்கின்றோம்.

ஒரு பொறுப்பு வாய்ந்த இந்த நாட்டின் குடிமகன் என்ற வகையில் முன்னைய எல்லா தேர்தல்களையும் பார்க்க இந்த தேர்தலில் தமிழர்களும், சிங்களவர்களும் துருவமயப்பட்டுள்ளமை பற்றி கவலையடைகிறேன்.

எனது விசுவாசமான அபிப்பிராயத்தில் சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள் எனக் கருதுகின்றேன்.

இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன்.

மிக அவசியமான பல்வேறு விடயங்கள் உள்ள போதும் சுமார் எழுபதாயிரம் வரையிலான யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்தவக் குடும்பங்கள் சுய ஆதரவில் வாழ்வதற்கான புனர்வாழ்வுத்திட்டமொன்றை உடன் வகுத்து அமுல் செய்யும்படி தங்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.

தாங்கள் கூறியபடியும் தேர்தலகள் ஆணைக்குழுவின் தலைவர் வேண்டிக் கொண்டபடியும் மாகாண சபைகள் தேர்தலை கூடிய விரைவில் நடாத்த நடவடிக்கை எடுப்பீர்கள் எனவும் நம்புகின்றேன என சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

No comments