அயோக்கிய கும்பலுக்கு எதிராக வாக்குப்பலத்தை காட்டுங்கள்


இந்த ஜனாதிபதி தேர்தல் நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் இடையிலான பெரும் போட்டியாகும். வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் தமது அயோக்கியத்தனத்துக்கு அடைக்கலமாக பயன்படுத்தும் கும்பலுக்கு எதிராக மக்கள் தமது வாக்குப்பலத்தை பிரயோகிக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கலந்து கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று (30) வவுனியாவில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,

கடந்த அரசாங்கத்தில் பெருந் தொகையானோர் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டனர். இவர்களை கண்டுபிடிப்பதற்கு எவ்விதமான பொறிமுறைகளும் இல்லாமல் அவர்களின் அப்பாவி உறவினர் செய்வதறியாது தவித்தனர். தற்போதைய அரசாங்கத்தின் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனத்தின் உத்தரவின் பிரகாரம் காணாமல் போனோரை கண்டறியும் ஆணைக் குழுவொன்றை அமைத்துள்ளோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகளை இந்த ஆணைக் குழுவில் பதிவு செய்ய முடியும். இதன்மூலம், காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டறியும் விதத்தில், அவர்களது குடும்பத்தினரின் பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமான தீர்வுகள் வழங்கப்படும். அத்துடன் இழப்பீடுகளை வழங்கவும் அவர்களின் குடும்பத்துக்கு மறு வாழ்வாழ்வு அளிக்கவும் இதன்மூலம் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட அநியாயங்களை மீளமைப்பதற்காக தற்போதைய அரசாங்கம் இந்த ஆணைக்குழுவை நியமித்துள்ளது. அதுமட்டுமன்றி, தனிப்பட்ட வன்மங்களுக்காக மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல், அட்டூழியங்கள், அட்டகாசங்கள் இனியும் தொடராமல் தடுப்பதற்கான உத்தரவாதங்களை தற்போதைய அரசாங்கத்தினால் சட்டமூலமாக அமுல்படுத்தியுள்ளோம்.

நாட்டின் இளம் சந்ததியினருக்கு புதிய உற்சாகத்தையும், உற்வேகத்தையும் உருவாக்குகின்ற இளம் தலைவராக நாங்கள் சஜித் பிரேமதாசவை களமிறக்கியுள்ளோம். இதனால் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மட்டுமல்ல, சகவாழ்வை விரும்பும் அனைத்து சமூகங்களைச் சேர்ந்தவர்களும் அவருக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றனர். இதைவிட பெரியதொரு ஆறுதலை மக்கள் அடையப் போவதில்லை.

வெளிநாட்டு சக்திகளுக்கு சோரம்போகாத இலங்கையை உருவாக்கி புதிய யுக மாற்றத்தை உருவாக்குவதற்கு நாங்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளோம். வெறுமனே தேசியவாதத்தையும் தேசப்பற்றையும் தங்களின் அயோக்கியத்தனத்துக்கு அடைக்களமாக பயன்படுத்துகின்ற கும்பலுக்கு எதிராக, நேர்மையான, சகல இனங்களுக்கும் நிம்மதியான வாழ்வை தரக்கூடிய தலைவராக சஜித் பிரேமதாசவை அடையாளம் கண்டிருக்கிறோம்.

இந்த ஜனாதிபதி தேர்தலானது நியாயத்துக்கும் அநியாயத்துக்கும் நடக்கின்ற போட்டியாகும். சிறுபான்மை மக்களை துச்சமாக மதித்து, யுத்தம் என்ற போர்வைக்குள் அவர்கள் ஏற்படுத்தி கெடுபிடிகள் யுத்த முடிவின் பின்னரும் தீர்ந்தபாடில்லை. தொடர்ச்சியான பாய்ச்சல் நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் கும்பலுக்கு நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க முடியாது.

சிறுபான்மை தலைமைகள் ஒருமித்து உருவாக்கியுள்ள சஜித் பிரேமதாச மீது நீங்கள் வைக்கும் நம்பிக்கை, உங்களிடமிருந்து வருகின்ற உற்சாக்கத்தின் மூலம் வெளிப்படுகின்றது. இந்த தேர்தல் உங்களுக்கு கிடைத்திருக்கின்ற ஒரு சந்தர்ப்பமாக கருதி, ஜனநாயகத்தை நிலை நாட்டக்கூடிய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

அடிக்கடி வரட்சியினால் பாதிக்கப்படும் வன்னி மாவட்டத்துக்கு, நாம் அமைச்சை பொறுப்பேற்றதிலிருந்து பல குடிநீர்த் திட்டங்களை அறிமுகப்படுத்தினோம். ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் மூலம் பேராறில் பாரிய நீர்த் தேக்கத்தை உருவாக்கி, அதிலிருந்து வவுனியா உட்பட சுற்றுப்புறத்திலுள்ள பல நகரங்களுக்கும் நீரை பகரிந்தளிக்கின்ற முயற்சியில் நாங்கள்வெற்றி கண்டுள்ளோம்.

அது மட்டுமன்றி, நீரை கொண்டுசெல்ல முடியாத பிரேதசங்கள் அனைத்துக்கும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கியுள்ளோம். மல்வத்து ஓயாவில் நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்து, அப்பிரதேசத்தில் நீர்ப்பாசனம் வழங்குவதுடன், வன்னியில் நீர் வழங்கல் திட்டத்தை நிறைவுசெய்யும் கட்டத்தில் இருக்கின்றோம். அதேபோல் பாகற்குளத்தை அண்டிய சகல பிரதேசங்களுக்கும் நீரை கொண்டு செல்லக்கூடிய திட்டங்களை நாங்கள் முன்னெடுத்துள்ளோம்.

வரட்சியினால் பாதிப்படைகின்ற பல இடங்களுக்கு பாரிய நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, நீர் வழங்கல் திட்டங்களையும் நீர்ப்பாசனத் திட்டங்களையும் செய்து கொடுத்துள்ளோம். கல்வித் துறையிலும் இந்த அரசாங்கம் பாரிய யுகமாற்ற புரட்சியை ஏற்படுத்தியுள்ளது. எந்த அரசாங்கத்திலும் இல்லாதவாறு இந்த அரசாங்கத்தின் மூலம் அபிவிருத்திகளுக்கு பாரிய நிதி ஒதுக்கீடுகளை செய்திருக்கிறோம் - என்றார்.

No comments