கோத்தாவின் நாக்கை பிடுங்குவது போல் கேள்வி எழுப்பிய மங்கள

வடக்கிற்கு செல்வது பாதுகாப்பு இல்லை என கூறிய கோட்டா தற்போது மட்டும் எவ்வாறு சென்றார் என அமைச்சர் மங்கள சமரவீர கேள்வியெழுப்பியுள்ளார்.
யாழில் இன்று (திங்கட்கிழமை) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரசார கூட்டம் இடம்பெற்று வருகின்றது.
இதில் கலந்துகொள்வதற்காக மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷவின் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ள நிலையில் டுவிட்டரில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் அந்த பதிவில் “இரண்டு மாதங்களுக்கு முன்பு வடக்கிற்கு பயணம் செய்வது குறித்த பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி கோட்டாபய ராஜபக்ஷ யாழ்ப்பாணம் நீதிமன்ற வழக்கை புறக்கணித்திருந்தார்.
இப்போது அவர் யாழ்ப்பாணத்தில் அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். ஆனால் நீதிமன்றங்கள், ஊடகங்களின் கேள்விகள் மற்றும் விவாதங்களுக்கு ஏன் இவ்வளவு பயப்படுகின்றார்” என குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 இல் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செயலாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென காணாமற் போயினர்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆட்கொணர்வு மனு வழக்கு தற்போது யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் விசாரணைக்குத் தோற்றுமாறு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு யாழ்ப்பாணம் வர முடியாமல் இருப்பதாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments